சசி பாணியில் நிர்வாகிகளை வந்து கெஞ்ச வைக்க தினகரன் திட்டம்- தொண்டர்களுக்கு ரகசிய உத்தரவு!
அதிமுக பயணிக்கும் திசையின் மடையை மாற்ற திட்டமிட்டுள்ள தினகரன், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தன்னை வந்து சந்தித்து செல்ல ரகசிய உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : அதிமுகவை தனது பக்கம் திருப்ப சசிகலாவை அனைத்து நிர்வாகிகளும் சென்று கெஞ்சியது போலவே தன்னையும் நிர்வாகிகள் வந்து கெஞ்சும் திட்டத்தை அரங்கேற்ற டிடிவி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியை யார் வழி நடத்துவது என்று தெரியாமல் கட்சியினர் அல்லாடினர். அப்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று சசிகலா காலில் விழுந்து நீங்கள் தான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று கெஞ்சினார்கள்.
கெஞ்சினார்கள் என்று சொல்வதைவிட கட்சியைக் கைப்பற்றுவதற்காக அப்படி ஒரு நாடகம் மன்னார்குடி கும்பலால் அரங்கேற்றப்பட்டது . ஒரு மாத இடைவேளையில் சசிகலா காலில் விழாத நிர்வாகிகளே இல்லை. அதிமுகவினரின் அனுதாபத்தை சம்பாதிக்கும் வகையில் போடப்பட்ட அதே திட்டத்தைத் தான் இப்போது தினகரனும் கையில் எடுத்துள்ளாராம்.
ஓதப்பட்ட மந்திரம் இது தானாம்
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக கட்சியை தொடர்ந்து வழி நடத்தி செல்ல தினகரன் கட்சிக்கு தேவை என்ற கோஷத்தை ஆதரவாளர்கள் காதில் ஓதி விட்டுள்ளார்களாம். அதனால் தான் நாஞ்சில் சம்பத், வெற்றிவேல் உள்ளிட்ட அனைத்து துதி பாடிகளும் தினகரன் தான் கட்சியின் அடையாளம் என்று திரும்பத் திரும்ப கூறி வருகின்றனராம்.
ரகசிய உத்தரவு
அது மட்டுமில்லை தற்போது வரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி.தினகரனை வந்து சந்தித்து சென்றுள்ளனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ரகசிய அசைன்மென்ட் என்னவென்றால் ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் வீதம் 500 பேராக நாள்தோறும் தினகரனை சந்தித்து கட்சிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்க வேண்டுமாம்.
எம்எல்ஏக்கள் அட்வைஸ்
கட்சி அலுவலகத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் டிடிவி தீவிரமாக உள்ளதாலேயே கட்சியை அவர் பார்க்கட்டும், ஆட்சியை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று முதல்வருக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அட்வைஸ் செய்துள்ளனர். இது மட்டுமல்ல மத்திய அரசின் அழுத்தம் காரணமாக பேச்சுவார்த்தை குழுவை கலைத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பலம் குறைந்து வருவதாகவே தெரிகிறது.
அடுத்த அதிரடி
கட்சி வட்டாரத்தின் தற்போதைய அப்டேட் படி முதலில் ஈபிஎஸ், தினகரன் கோஷ்டி இணைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அடுத்த ஷாக்காக பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டதும் நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று மாஜிக்கள் மனப்பால் குடித்த நிலையில் அது கை கூடாதததால் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் ஓ.பிஎஸ்சும் தாய் கழகத்துடன் இணைவார் என்று சொல்லப்படுகிறது.
நல்லா பண்றாங்க அரசியல்
இந்தக் கொடுமைகள் எல்லாம் தான் தமிழக அதிமுக அரசியலில் அடுத்தடுத்து நிகழப்போகும் அக்கப்போர்களாம். கட்சி பொறுப்பை டிடிவி பார்ப்பார், ஈபிஎஸ் மற்றும் ஓ.பிஎஸ் ஆட்சியை கவனிப்பார்கள் என்பதே டீலாம் இதை நோக்கித் தான் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் இருக்கப் போகிறதாம். நல்லா அரசியல் பண்றாங்கப்பா.