புனிதா பலாத்கார கொலை வழக்கு: குற்றவாளி சுப்பையாவிற்கு ஆயுள் மற்றும் 5 ஆண்டு சிறை!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி சுப்பையாவிற்கு ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்த தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கிளாக்குளத்தைச் சேர்ந்த செüந்தரபாண்டியன் மகளான 7ஆம் வகுப்பு மாணவி புனிதா (13) கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தாதன்குளம் ரயில் நிலையம் அருகே பாலியல் பலாத்கார முயற்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் ரயில் நிலையம் அருகே முள்புதர் பகுதியில் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த செய்துங்கநல்லூர் போலீஸார் மணியாச்சி அருகேயுள்ள பாறைக்குட்டத்தைச் சேர்ந்த சுப்பையாவை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய 21 சாட்சிகளிடம் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது. மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பால்துரை முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சாட்சி விசாரணைக்குப் பிறகு இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பால்துரை முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் வியாழக்கிழமையுடன் முடிவடைந்ததால் வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி பால்துரை , சுப்பையா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவி புனிதாவை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் கடத்தலில் ஈடுபட்டதால் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும்,1000 ரூபாய் அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தூக்கு தண்டனை தேவை
ஆனால் இந்த தண்டனைக்கு புனிதாவின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குற்றவாளியை தூக்கில் போடவேண்டும். நிர்பயா வழக்கை போல குற்றாவாளி சுப்பையாவை தண்டிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்