குமாரபாளையத்தில் சிங்கள தொழில்முனைவோருக்கு எதிராக த.வா.கா. முற்றுகை- 50 பேர் கைது!
நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் சிங்கள தொழில்முனைவோர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்தியதமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரியில் இன்றும் நாளையும் பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது.
இதில் இலங்கையிலிருந்து ஏழு சிங்களப் பெண் தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு இலங்கையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பர்.
இது இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டசபை தீர்மானத்துக்கு எதிரானது தமிழ் அமைப்புகளின் கருத்து.
இதனால் சிங்கள தொழில்முனைவோரை அனுமதிக்கக் கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று மதுரையில் போராட்டம் நடத்தினர்.
இன்று குமாரபாளையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி தலைமையில் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியை முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை கைது செய்தனர்.