ஆகஸ்ட் 15ல்.. மொழி விடுதலைக்காக இந்திய அளவிலான ட்விட்டர் போராட்டம்!
சென்னை: ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம். நாடே சுதந்திர தினத்தையொட்டி கொடி ஏற்றி மிட்டாய் சாப்பிட தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த நாளில் டிவிட்டரில் ஒரு புரட்சிப் போராட்டம் அரங்கேறவுள்ளது. அதுதான் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்படும் மொழி விடுதலைக்கான அகில இந்திய அளவிலான டிவிட்டர் போராட்டம்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற நாளை நாம் கொண்டாடவுள்ள நிலையில் அதே நாளில் இந்தித் திணிப்பிலிருந்து நமது இந்திய மொழிகளைக் காக்கும் போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.
வா நாமிருவரும் மற்றவர் மொழியைக் கற்போம் மதிப்போம் என்பது குடியாட்சி. என் மொழியை நீ பேசு என்று ஆணையிடுவது வல்லாதிக்கம். #StopHindiImperialism
— Kurumban (@kurumban6) January 26, 2016
இந்தப் போராட்டத்துக்கான முக்கியக் காரணம், இனி அகில இந்திய வானொலியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் காஷ்மீரி மொழிகளில் மட்டுமே செய்திகள் ஒலிபரப்பாகும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிச் செய்திகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும்தான்.
இந்தியாவில் இந்தி தவிர பிற மொழிகளே இருக்கக் கூடாது, பேசப்படக் கூடாது என்பது போல மத்திய அரசு நடந்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. இதற்குக் காரணம் மத்திய அரசின் செயல்பாடுகள்தான். இந்தித் திணிப்பை படு வேகமாக வலிந்து நிகழ்த்தி வருகிறது மத்திய அரசு. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் அது கவலைப்படுவதில்லை.
@narendramodi @PMO_India @PMOIndia #StopHindiImperialism #divided by States by #language.#respect#regional language. pic.twitter.com/y6ayhPDfBH
— Aravind (அரவிந்த்) (@aravindgeek) August 12, 2016
மத்திய அரசு இந்தியை தவிர வேறு எந்த இந்திய மொழியையும் ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை. இந்தியாவெங்கும் வரியை பெற்றுக் கொள்ளும் இந்திய அரசு, அந்த வரிப்பணத்தில் இந்தியை வளர்க்கத் தான் அதிக அளவில் நிதியை ஒதுக்குகிறது. எல்லா இடங்களிலும் இந்தியை வலிந்து திணித்து வருகிறது.
எங்குமே தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் இடமளிப்பதில்லை மத்திய அரசு. சுதந்திர நாள் உரையின் போது கூட பிரதமர் மோடி அவரது தாய் மொழியான குஜராத்தியிலோ அல்லது அனைவருக்கும் பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத்திலோ பேசுவதில்லை. அமெரிக்காவுக்குப் போனால் கூட இந்தியில் மட்டுமே பேசுகிறார்.
१५ अॉगस्ट संपूर्ण भारताचा स्वातंत्र्य दिवस आहे. हिंदी पट्ट्याचा नाही. #मराठी तून व्यक्त व्हा. #StopHindiImperialism pic.twitter.com/nRzROJJZQ8
— अनुबंध मराठी (@anubandhmarathi) August 12, 2016
பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் நிறைந்த நமது நாட்டில் ஒற்றை மொழிக்கு மட்டுமே கொடுக்கப்படும் அதிகாரம் அநீதியானது. இந்த அநீதியை கண்டிக்கும் வகையிலும், இந்தியாவில் பட்டியல் மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் ஆட்சி மொழி அதிகாரம் கொடுக்கும் விதத்திலும் நாடு தழுவிய ட்விட்டர் பிரச்சாரம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று காலை முதல் நடைபெறும் இந்த போராட்டத்தில் டிவிட்டரில் மக்கள் தங்களது கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் #StopHindiImperialism என்ற ஹேஷ் டேக்கைக் குறிப்பிட்டு பதிவு செய்யவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் நாடே விடுதலையைக் கொண்டாடவுள்ள சமயத்தில் நெட்டிசன்கள் மொழி விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.