இரட்டை இலையை கைப்பற்ற தீபா களமிறங்கினார் - தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்
நாங்கள்தான் உண்மையான அதிமுக, கட்சி, சின்னத்தை தங்களுக்கே தரவேண்டும் என்று தீபா பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை: அதிமுகவின் உண்மையான நிர்வாகிகள் தாங்கள்தான் என்று தேர்தல் ஆணையத்திடம் தீபா தெரிவித்துள்ளார். எங்களுக்கே கட்சி, சின்னத்தை அளிக்க வேண்டும் என்று கோரி அவர் சார்பில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பிப்ரவரி மாதம் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை, அதிமுக கட்சி கொடிக்காக இருவரும் மல்லுக்கட்டி தேர்தல் ஆணையத்தை அணுகினர். இதனால் கட்சி, கொடி, சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அதிமுக கட்சி, கொடி
யார் உண்மையான அதிமுக என்று தெரிந்த பின்னரே கட்சியும் கொடியும் கிடைக்கும். ஓபிஎஸ், சசிகலா அணி சார்பில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர். லாரி லாரியாக லட்சக்கணக்கில் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இரட்டை இலை சின்னம்
இரட்டை சிலை சின்னத்தை முடக்கிய தலைமை தேர்தல் ஆணையம் ஜூன் 16ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் உத்தரவிட்டது.

சசிகலா அணி
இந்நிலையில் நேற்று 47,151 பிரமாணப்பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணி தாக்கல் செய்துள்ளது. சசிகலா அணி இதுவரை 3,98,632 பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் அணி
ஓபிஎஸ் அணி சார்பில் 3 லட்சம் பிரமாண பத்திரங்கள் வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சி, சின்னத்தைக் கைப்பற்ற ஓபிஎஸ் அணியும் முட்டி மோதி வருகிறது.

தீபாவின் லட்சியம்
இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் கட்சி, சின்னத்தை மீட்க களமிறங்கியுள்ளார். பேரவை ஆரம்பிக்கும் போது சின்னத்தை மீட்பதுதான் தன்னுடைய லட்சியம் என்று கூறியிருந்தார்.

தேர்தல் ஆணையம் கெடு
தேர்தல் ஆணையம் அளித்த கெடு முடிய உள்ள நிலையில் பேரவை நிர்வாகிகளிடம் இருந்து பிரமாணப்பத்திரம் பெற்று அவர் ஆணையத்திடம் அளிக்கிறார்.

50000 பேர் கையெழுத்து
50ஆயிரம்பேர் பிரமாணப்பத்திரம் தந்துள்ளனர் என்று தீபா கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தேர்தல் ஆணையமே நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ள அவர், தேர்தல் நடைபெறும் வரை தனக்கு கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்தும் அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

லாரி லாரியாக ஆவணங்கள்
தீபா சார்பில் வக்கீல் பசும்பொன்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வியாழக்கிழமை தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்கின்றனர். லாரி லாரியாக லட்சக்கணக்கில் ஆவணங்கள் வருவதைப் பார்த்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் தீபாவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications