8 மணி நேர மின்வெட்டு: தவிக்கும் தமிழகம்!... முதல்வரிடம் முறையிடும் தொழில் அமைப்புகள்
கோவை: தமிழகத்தில் சென்னை நீங்கலாக நகர்புறங்களிலும், கிராமங்களிலும் 8 முதல் 10 மணிநேர மின்வெட்டு நிலவுகிறது. இதனால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டு பிரச்னை குறித்து அனைத்து தொழில் அமைப்புகள் நிர்வாகிகள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
கோவையில், 25 தொழில் அமைப்புகள் உறுப்பினராக கொண்ட தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, கொடிசியா, காட்மா, டேக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மின்வெட்டு பிரச்னை தீரும் வரை சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்வெட்டை அமல்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் நிலவும் மின்வெட்டு குறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இரு வாரங்களுக்குள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து முறையிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.