ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்காது: வைகோ
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று தனது உரையில் கூறியுள்ளார் மதிமுக தலைவர் வைகோ.
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து இன்று அவர் மன்னடியில் பிரச்சாரம் செய்து பேசினார்.
அப்போது பேசிய வைகோ, "நாடு முழுவதும் மாற்றம் நிகழ வேண்டும் என்ற அலை மக்களிடையே அதிகமாக வீச ஆரம்பித்து விட்டது.இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது.மாநில ஆட்சியில் உள்ளவர்களும் அது பற்றி கண்டுகொள்வதில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீரும்.முத்துக்குமாரின் கனவு நனவாகும்.
தவறான பொருளாதார கொள்கையை கொண்டுள்ள மத்திய அரசு மீண்டும் ஆட்சிக்கு எவ்வாறு வர இயலும்.மேலும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறைதண்டனை அனுபவித்த ராசா தேர்தலில் எப்படி போட்டியிட முடியும்? இது தேர்தல் விதிமுறைகளுக்கும்,மக்களுக்கும் எதிரான ஒரு செயலாகும்.
தேர்தலில் கூட்டணி என்ற பெயரில் சில கட்சியினர் துண்டு போட்டு பிரதமர் பதவியை பிடிக்க முயலுகின்றனர்.அதனால் எல்லாம் அப்பதவி கிடைத்துவிடாது.இந்தியாவில் தற்போது நடந்து வரும் ஆட்சி போன்ற ஒன்றை வேறு எந்த நாடும் பார்த்திருக்காது.
அதிமுக கூட்டணியிலான ஆட்சியின் பிரதமர் கனவு பலிக்க போவதில்லை. போயஸ் தோட்டத்தில் "மாதிரி" பாராளுமன்றம் கட்டினால்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும். ஜெயலலிதா, தம் கட்சி அங்கம் வகிக்கப்போகிற கூட்டணி எது என்று தெளிவுபடுத்த வேண்டும்.
அண்ணா பதவி ஏற்றபோது அவரது குடும்பத்தினர் யாரும் தேர்தலில் பங்கேற்க கூடாது என உத்தரவே போட்டார். ஆனால், அவர் பெயரை சொல்லி கட்சி நடத்தும் திராவிட கட்சிகள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்களா? பாஜக தலைமையிலான கூட்டணிதான் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க போகின்றது" என்று பேசினார் அவர்.