பன்முகத் தன்மை சிதைக்கப்பட்டால் இந்தியா ஒரே நாடாக இருக்காது.. வைகோ அதிரடி
இந்தியாவின் பன்முகத் தன்மை சிதைக்கப்பட்டால் இந்தியா ஒரே நாடாக இருக்காது என்று வைகோ அதிரடியாக கூறியுள்ளார்.
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் மறைந்த மதிமுக நகரச் செயலாளர் சங்கரநாராயணனின் வீட்டுக்கு ஆறுதல் கூறுவதற்காக மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று செங்கோட்டை வந்தார்.
அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாய்கள் பழுதடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களை நாசமாக்கி வருகின்றன.
உடனே விடுதலை செய்..
இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன், மணியரசன் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
கிளர்ச்சியை அடக்க முடியாது
மக்கள் கிளர்ச்சி நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த கிளர்ச்சியை காவல்துறைக் கொண்டோ ராணுவம் கொண்டோ அடக்க முடியாது. போராட்டங்கள் நசுக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. மக்கள் கிளர்ச்சியை அடக்க முடியாது.
கட்டமைப்பு இல்லாமல் கொண்டு வந்த ஜிஎஸ்டி
பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே வரி என்று ஜிஎஸ்டி அறிமுக விழாவில் அறிவித்தார். அப்போது குடியரசுத் தலைவரும் உடனிருந்து தெரிவித்தார். ஒரே வரி ஒரே நாடு என்று முழக்கமிட்டனர். சரியான கட்டமைப்பு இல்லாமல் இந்த வரி விதிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
அச்சம் உருவாக்கும் ஜிஎஸ்டி
இந்த ஜிஎஸ்டி பற்றி பிரதமர் மோடி கூறும்போது தொடக்கத்தில் அச்சத்தை உருவாக்கினாலும் பின்னாளில் நன்மை தரக் கூடியது என்றார். அப்படியென்றால் ஆரம்பத்தில் அச்சம் இருப்பது உண்மை.
நசுங்கும் பட்டாசு, தீப்பெட்டு தொழில்கள்
கையால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிலுக்கு 5 சதவிகித வரி விதிப்பு மக்களை பாதித்து துயரத்திற்கு ஆளாகியுள்ளது. இதேபோன்று பட்டாசு தொழிலும் நசுக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் தொழிலாளர்கள் பிழைப்புக்கு எங்கே செல்வார்கள்.
ஒரே நாடாக இருக்காது
ஒரேநாடு ஒரே வரி என்று மோடி சொல்கிறார். இது அடுத்ததாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று போகுமோ என்று எனக்கு பயம் வருகிறது. ஒரு வேளை இந்தியாவின் பன்முகத் தன்மை சிதைக்கப்பட்டால் இந்தியா ஒரே நாடாக இருக்காது என்று வைகோ கூறினார்.