ஓஎன்ஜிசி குழாய் உடைந்த மாதிரிமங்கலத்தில் வைகோ- மக்களை திரட்ட முகாமிடுவேன் என அறிவிப்பு!
மயிலாடுதுறை மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் உடைந்த இடத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ பார்வையிட்டார்.
கும்பகோணம்: மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பார்வையிட்டார். அப்போது, ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களை திரட்டும் வரை அங்கேயே முகாமிடப் போவதாகவும் வைகோ அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டிருக்கிறதுது. தற்போது குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டது.
4-வது முறையாக உடைப்பு
கச்சா எண்ணெய் கசிவை கண்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர். மாதிரிமங்கலத்த்தில் 4-வது முறையாக ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாய் உடைந்துள்ளது.
வைகோ
இந்த எண்ணெய் குழாய் உடைந்த பகுதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி தீரத்துக்கு மக்களை திரட்டுவதற்காக இங்கேயே நான் இருப்பேன்.... விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
எச்சரிக்கை
கலிங்கபட்டியில் நடந்த மதுவிலக்கு போராட்டம் போல இந்த ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டமும் எழுச்சி பெறும். காவல்துறை எங்களை அடக்கினால் மத்திய அரசின் கைக்கூலி என விமர்சிப்பேன் என்றார்.
வழக்கு போடுங்கள்
முன்னதாக கும்பகோணம் தாராசுரத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், போராட்டத்தை தூண்டுவோர் மீது வழக்கு தொடுப்போம் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மிரட்டியுள்ளது. நானே போராட்டத்தை தூண்டிவிட்டேன். ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் கருவிகளை உடைப்பேன். என் மீது வழக்கு தொடரட்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.