நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு: மதுரையில் வைகோ உண்ணாவிரதம்
மதுரை: நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வைகோவுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மத்திய அரசு நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதை எதிர்த்து வைகோ போராட்டம் நடத்தி வருகிறார். திட்டத்துக்கு தடை விதிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அண்மையில் சமூக சேவகி மேதாபட்கருடன் சேர்ந்து, மதுரையில் இருந்து தேனி மாவட்டம் வரையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் வைகோ இன்று மதுரை பழங்காநத்தம், நடராஜ் தியேட்டர் அருகில் காலை 9 மணிக்கு நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இந்த போராட்டத்தில் க.கா.இரா.லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, கி.வே.பொன்னையன், இரா.சா.முகிலன், ச.சந்திரன், பூ.பா.இளையரசு, புதூர் மு.பூமிநாதன், டாக்டர் ப.சரவணன், எம்.டி.சின்னச்செல்லம், புலவர் செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், எஸ்.பெருமாள், வழக்கறிஞர் எஸ்.ஜோயல், பாஸ்கர சேதுபதி உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.