ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
சென்னை : 'ஒரே நாடு ஒரே வரி' என்ற கவர்ச்சியான முழக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி என்னும் 'சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு' முறை மிகபெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரே வரி என்று சொல்லப்பட்டாலும் 5% 12% 18% 28% என நான்குவகையான வரிகள் வசூலிக்கப்ப்படுகின்றன. சுமார் 60 விழுக்காடு பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கும் நாடு இந்தியா மட்டும்தான். இந்த வரிவிதிப்பு முறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
அத்துடன், 'பணமதிப்பு அழிப்பு' நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு தணிவதற்கு முன்பே எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்துவருகிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மாநிலங்களை கிராமப் பஞ்சாயத்துகளின் நிலைக்குத் தள்ளிவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சிபெற்ற மாநிலங்களின் வரி வருவாய் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஜிஎஸ்டியால் ஏற்படும் வருவாய் இழப்பை சில ஆண்டுகளுக்கு மட்டும் ஈடுசெய்வதற்காக குளிர்பானங்கள், புகையிலை, நிலக்கரி, ஆட்டோமொபைல் முதலான குறிப்பிட்ட சில பொருட்களின்மீது மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் வரி அரசியல் சட்டத்துக்கும் ஜிஎஸ்டி சட்டத்தின் நோக்கத்துக்கும் எதிராக உள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்தியாவின் பொருளாதார நிலை மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை முற்றாக கைவிட்டு, மாநிலங்களுக்கும் வரிவசூலிக்கும் அதிகாரமளிக்கும் வகையில் வரிவிதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்!
மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால், பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இந்தியாவின் பிரதமாராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்குமான சூழல் உருவாகிறது. இதனால், சிறிய மாநிலங்கள் பலவகைகளில்
வஞ்சிக்கப்படும் நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், ஆட்சியதிகாரப் பகிர்வு மற்றும் பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்ட வலுவான அதிகாரமுள்ள பதவிகள் ஆகியவற்றில் சிறிய மாநிலங்களுக்கும் சுழற்சி அடிப்படையில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அத்துடன், தற்போது மக்களவைக்கு நடைமுறையில் இருப்பதைப் போல மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளிலும் கேபினட் அமைச்சரவையிலும் தலித் மற்றும் பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
நீதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்!
நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியா முழுமைக்கும் ஒருங்கிணைந்த நீதிமுறை அமைப்பை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும்,
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனைகள் பெறப்படவேண்டும். ஆனால், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.
அடுத்து, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்குகளில் பெரும்பாலும் மத்திய அரசின் மேலாதிக்கத்துக்கு ஊறு நேராவகையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்கு எத்தகைய அதிகாரமுமில்லை என்னும் நிலையே இவற்றுக்கு காரணமாகும். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 217, 222, 223, 224, 224 ஏ ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தேசியப் புலனாய்வு முகமையை ( என்ஐஏ ) கலைக்கவேண்டும!
சட்டம் ஒழுங்கைப் பேணுவது உள்ளிட்ட காவல்துறை அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் உள்ளன. மத்திய அரசிடமிருக்கும் சிபிஐ என்னும் புலனாய்வு அமைப்பு மாநிலத்தில் ஒரு வழக்கை விசாரிக்கவேண்டுமெனில் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும், அல்லது நீதிமன்றத்தின் ஆணை பெறப்படவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மாநில அரசின் காவல்துறை அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் 'தேசிய புலனாய்வு முகமை' (என்ஐஏ ) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பயங்கரவாதக் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கென தனிச் சட்டம் ஒன்றின்மூலம் இந்த அமைப்பு உருவாக்கபட்டது. நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே பயங்கரவாதக் குற்றம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு இந்த தேசிய புலனாய்வு முகமை என்னும் அமைப்புக்கு அச்சட்டம் வகை செய்கிறது.
சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்துவரும் நிலையில், மதச்சார்பின்மைக்கு எதிரான வகுப்புவாத கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை ஏவிவிடக்கூடிய பேராபத்து உள்ளது.
எனவே, மாநில அரசின் காவல்துறை அதிகாரத்துக்கு எதிராகவுள்ள தேசிய புலனாய்வு முகமை என்னும் என்ஐஏ அமைப்பைக் கலைக்கவேண்டுமெனவும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கே அளித்திட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.