2ஜி வழக்கின் தீர்ப்பு மீண்டும் தி.மு.க தொண்டர்களை தலை நிமிரச் செய்துள்ளது : திருமாவளவன் மகிழ்ச்சி
2ஜி வழக்கின் தீர்ப்பு மீண்டும் தி.மு.க தொண்டர்களை தலை நிமிரச் செய்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : 2ஜி வழக்கின் தீர்ப்பின் மூலமாக தி.மு.க தொண்டர்கள் மீண்டும் தலை நிமிர்ந்து உள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி.ஷைனி விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளார்.
ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், தி.மு.க மீது மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருந்தது. இதனால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கூட தோல்வியைத் தழுவியது தி.மு.க கூட்டணி. இந்த தோல்விகளால் தி.மு.க தொண்டர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.
இந்நிலையில், இன்று வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த தீர்ப்பை தி.மு.க தொண்டர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், ஆறு ஆண்டுகளாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மீதும் சுமத்தப்பட்டு இருந்த கலங்கமும், குற்றச்சாட்டும் இந்த தீர்ப்பின் மூலம் துடைத்தெறியப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை கவலையில் இருந்த தி.மு.க தொண்டர்களின் தலை நிமிர்ந்து உள்ளது என்று தெரிவித்தார்.
விடுதலை என்று அறிவிக்கப்பட்டு விட்டாலும் ஆ.ராசாவும், கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு துன்பம் அடைந்ததற்கு நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது? இதில் பொய்வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நமது சட்டத்தில் அதற்கான வழிமுறைகள் இல்லை எனவே அதற்கான திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.