திமுக கூட்டணியில் தேமுதிக சேர மீண்டும் திருமாவளவன் அழைப்பு
அரியலூர்: திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சி. அது ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது.
ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரதிய ஜனதாவும் காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு கொண்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர் விடுதலைக்கு பாடுபடுவோம் என்று பாஜகவினர் சொல்வது ஏமாற்றும் செயல்.
தேசிய அளவில் 3வது அணி என்பது எப்போதும் வெற்றிகரமானதாக இருந்தது இல்லை. தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே கோரிக்கையை தேமுதிகவிடம் மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன். தே.மு.தி.க. ஜாதி, மதவெறி கட்சிகளுடன் இணைந்து விடக் கூடாது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற குரல் நேரு காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அம்பேத்கர் இது சமூக நீதிக்காக என விளக்கமளித்து தெளிவுபடுத்தினார். ஜாதி பெயரால் தீண்டாமை என்ற நிலை மாறும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஒதுக்கினால் அது சமுக நீதியாகாது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள சமூக அந்தஸ்து மாறுபடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்தஸ்து கிடைக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டை எதிர்க்க யார் துணிந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
நான் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க., வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். தே.மு.தி.க. ஜாதி, மதவெறி கட்சிகளுடன் இணைந்து விட கூடாது.
இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.