வேளாங்கண்ணி மாதா ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- குவியும் பக்தர்கள்
சென்னை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலத்தின் ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டிற்கான திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 4ம் தேதி சிலுவைப்பாதை நிகழ்ச்சிகளும், 7ம் தேதி தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலியும், இரவு ஆரோக்கிய மாதா தேர்பவனியும் நடைபெற உள்ளன. செப்டம்பர் 8ம் தேதி சிறப்பு கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பாதுகாப்புப் பணியில் 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக அறிவிப்புப் பலகைகள், காவல் உதவி மையங்கள், கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி
பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கோயிலின் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்களும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். 7ம் தேதியன்று புனித ஆரோக்கிய மாதா தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக செல்லும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பெரம்பூரில் இருந்து பெசன்ட் நகர்வரை பாதையாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.