தேச தலைவர்களின் கனவை நனவாக்க ஆதரவு தாருங்கள்... எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு கோபால கிருஷ்ண காந்தி கடிதம்
துணை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கும் அப்பதவியின் எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளா
சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரி அப்பதவியின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி, முதல்வர் எடப்பாடிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதைத் தொடர்ந்து தனக்கு ஆதரவளிக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கோபால கிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் கட்சிகளையும் தாண்டி தன்னை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு பாமக ஆதரவு அளித்துள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோபாலகிருஷ்ண காந்தியிடம் ஆதரவு அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி, பன்னீர் செல்வம், தினகரன் அணியினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.