தேமுதிக மகளிரணி செயலாளராக மாலதி வினோத் நியமனம் - விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: தேமுதிக மகளிரணி செயலாளராக மாலதி வினோத்தை நியமிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக மகளிரணி செயலாளராக இருந்த சிவகாமி முத்துக்குமார், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியதால் விஜயகாந்த் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தேமுதிக மகளிரணிச் செயலாளராக மாலதி வினோத் நியமிக்கப்படுகிறார். இவருக்கு தேமுதிக மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, மகளிர் அணி மற்றும் கட்சியின் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமானத் தொகுதிகளை வென்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது தேமுதிக. ஆளுங்கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் கூட்டணி முறிந்தது. பல எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களாக மாறினர்.
2016 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என்று பேசப்பட்டது. ஆனால் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்தது தேமுதிக. மாற்றம் தரும் கூட்டணி என்று தேர்தலைச் சந்தித்த தேமுதிக, ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாமல் டெபாசிட் இழந்தது. இது, தேமுதிகவினருக்கு பேரிடியாக இறங்கியது.
தேமுதிகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் ஒதுங்கத் தொடங்கினர். திமுகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி நிர்வாகிகளை வளைக்க கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது.
பல நிர்வாகிகளை விஜயகாந்த் நீக்கி வருகிறார். தேமுதிக மகளிரணி செயலாளராக இருந்த சிவகாமி முத்துக்குமார், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியதால் மாலதி வினோத்தை புதிய மகளிரணிச் செயலாளராக விஜயகாந்த் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications