விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி- தேமுதிக
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.
தேர்தல் பிரசாரம்
கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த். சட்டசபை தேர்தலிலும் கூட சுற்றுப் பயணம் மேற்கொண்ட விஜயகாந்த், பொதுமக்களிடம் கையசைத்து மட்டும் வாக்கு கேட்டார்.
விஜயகாந்த் அறிக்கைகள்
சட்டசபை தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தோல்வி அடைந்தது. இதன்பின்னர் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளை மட்டும் விஜயகாந்த் வெளியிட்டு வந்தார்.
மருத்துவமனையில் இன்று அனுமதி
இந்நிலையில் இன்று அதிகாலை மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்றது தொடர்பாக தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேமுதிக விளக்கம்
தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.