குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும்- விஜயகாந்த்!
சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏறத்தாழ 190 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 55 சதவீதம் அதிகரித்து, இந்தியாவில் மூன்றாவது இடத்திற்கும், குழந்தைகளை கொலை செய்வதில் நான்காவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான இந்த வன்கொடுமைகள், குற்றங்கள் பெருகுவதற்கு காரணம், தமிழகத்தில் ஆறாக ஓடுகிற மதுவும், சமூகத்தில் மாறாத, ஒழிக்கப்படாத சாதி, மத ஏற்றத்தாழ்வுகளும், தலைவிரித்தாடுகிற வறுமையும், நாட்டில் நடக்கின்ற கொடுமைகளை கண்டும் காணாத காவல்துறையும், மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாளர்களும்தான் என்று சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
இந்த குற்றங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டவை. ஆனால் இதைவிட அதிகமான குற்றங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படாமலேயே மறைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications