மாநிலங்களுக்கு இப்படி நிதி ஒதுக்கலாமே: இது தான் விஜயகாந்த்தின் பரிந்துரை!
சென்னை: மாநில வளர்ச்சிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிதிக்குழுவிடம் பரிந்துரை செய்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14வது நிதிக்குழுவிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
வரி வருவாய்க்கான ஆதாரங்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, முறையாக அவற்றை மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு இடையே சமமாகவும், நெறிமுறையோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும். சம்பிரதாயத்திற்காக ஒன்று அல்லது இரண்டு சதவீதங்களை மாநில ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக ஒதுக்காமல், மாநில வளர்ச்சிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
மாநில தனிநபர் மொத்த வருவாய் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்போது, 1971-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாடும் ஒன்று. இதற்கு மாற்றாக மாநில தனி நபர் வருவாயோடு, மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநில அரசுகளை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை அளித்திடும் வகையில் புதியதோர் வழிவகை காண வேண்டும்.
மத்திய அரசு விதித்த குறிப்பு விதிமுறைகள் அடிப்படையில் தான் நிதிக்குழு மாநிலங்களிடையே ஆய்வு செய்ய முடிகிறது. இது மறைமுகமாக மத்திய அரசு நிதிக்குழுவிற்கு ஒரு கட்டுப்பாட்டை விதிப்பதாகும். இதை நீக்கிவிட்டு, கூட்டாட்சி தத்துவத்தை மனதில் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி பகிர்மானத்தை நிதிக்குழுவே தீர்மானிக்கிற அதிகாரம் வழங்க வேண்டும்.
எந்த மாநிலத்தில் இருந்து எவ்வளவு கல்வி வரி மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறதோ, அதை அந்த மாநிலங்களுக்கே முழுமையாக அளித்திட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.