நெடுவாசல் அருகே 29வது நாளாக தொடரும் போராட்டம்.. இளைஞர்கள் மொட்டை அடித்து எதிர்ப்பு !
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே 29வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை என்ற பகுதியில் மக்கள் 29வது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நெடுவாசலில் இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த திட்டத்தை முற்றிலும் கைவிடும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்து வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுவாசல் சென்று போராட்டக்குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதனையடுத்து மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் பட மாட்டாது என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தனர். இதையடுத்து நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லாண்டார்கொல்லை என்ற பகுதியில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இதில் கிராம மக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 29 வது நாளை எட்டியுள்ளது.
இதனிடையே போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒ.என்.ஜி.சி ஆழ்குழாய் கிணறு முன்பு 10 இளைஞர்களுக்கு மொட்டை அடித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் மத்திய அரசின் முடிவை பொருத்து போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மற்ற பகதிகளில் நடந்த போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில், நல்லாண்டார்கொல்லையில் 29வது நாளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications