அரசு மதுக் கடைகளிலேயே மாமூல்.. மாட்டி விட்ட சூப்பர்வைசர்கள்.. கம்பி எண்ணும் கலால்துறை ஏ.சி!
விருதுநகர் : டாஸ்மாக் கடை சூப்பர்வைசரிடம் ரூ. 19 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது விருதுநகர் மாவட்ட கலால்துறை உதவி கமிஷனர் பழனியாண்டி மற்றும் கிளர்க் சீனிவாசன் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்கள் சிக்கியது தொடர்பாக பல பகீர் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்தினாலும், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் லைசென்ஸ் வழங்குவது கலால் துறையின் பணி. எனவே, கலால்துறை தாசில்தார்கள் டாஸ்மாக் மாவட்ட குடோனில் உள்ள சரக்குகளை சரிபார்த்து கடைகளுக்கு அனுப்பி வைப்பார்கள், மேலும், டாஸ்மாக் கடைகளில் அரசு சப்ளை செய்த மதுபானங்கள் மட்டும் தான் விற்கப் படுகிறதா அல்லது வேறு மதுபானங்களும் விற்கப் படுகிறதா என்பதைக் கண்காணிப்பதும் இவர்களது பணியே.
அவ்வாறு டாஸ்மாக் கடைகளில் ஏதேனும் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப் பட்டால், டாஸ்மாக் பொது மேலாளர் மற்றும் கலெக்டர், ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் கலால்துறையினர் புகார் அளிப்பர். அதன்படி, டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், இதையே காரணம் காட்டி ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் மாதம்தோறும் சோதனை நடத்தி மாமூல் வேட்டை நடத்தி வந்துள்ளனர் விருதுநகர் கலால்துறை அதிகாரிகள். இதன்படி, மாதந்தோறும் தங்களுக்கும் ஒரு கடைக்கு ஆயிரத்து 500 வீதம் மாமூல் தர வேண்டும் என அவர்கள் மிரட்டி வந்துள்ளனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள் அடிக்கடி மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனத் தெரிகிறது. எனவே, மதுபானங்களைக் கூடுதல் விலை வைத்து விற்று, மாமூல் கொடுத்து வந்துள்ளனர் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள்,
இந்நிலையில், சமீபத்தில் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்துள்ளனர் கலால்துறை உதவி கமிஷனர் பழனியாண்டியும், கிளார்க் சீனிவாசனும். அப்போது பதிவேடுகளை சரியாக பராமரிக்கவில்லை, எனவே உங்கள் மீது டாஸ்மாக் மாவட்ட மேனேஜரிடம் புகார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் அந்த பகுதியில் இருக்கும் 33 கடைகளிலும் மாதம் ஆயிரத்து 500 வீதம் வசூலித்து தர வேண்டும் என சூப்பர்வைசர் ராஜ்குமாரை மிரட்டியுள்ளனர்.
இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் பழனியாண்டி மாமூல் வேட்டை நடத்தியுள்ளார்.
இதனால், வெறுப்படைந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் ஒன்று கூடி பழனியாண்டியின் மாமூல் வேட்டையை அம்பலப்படுத்துவது என முடிவெடுத்தனர். அதன்படி, இது தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த ஐடியாவின் படியே ரூ.19 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த கலால் துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கிளார்க் சீனிவாசன் மூலம் பழனியாண்டியிடம் லஞ்சப்பணம் வழங்கப் பட்டுள்ளது.
அப்போதுதான், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி கமிஷனர் பழனியாண்டியையும், கிளார்க் சீனிவாசனையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.