தாலி பற்றி சர்ச்சை விமர்சனம்... குஷ்பு படத்தை எரித்து விஷ்வ ஹிந்து பரிஷத் போராட்டம்
நாகர்கோவில் : பெண்கள் தாலி அணிவது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு உருவ படங்களை எரித்து விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்தநாளையொட்டி, ‘யுனெஸ்கோ'பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு பெண்கள் அணியும் தாலி குறித்து விமர்சித்தார்.
அப்போது அவர் பெண்களுக்கு, சுயமரியாதை வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார் என்றும், எனவே பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம் என்றும் தெரிவித்தார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவிலில் வடசேரி சந்திப்பில், குஷ்புவின் உருவ படங்களை எரித்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.