5 உயிர்களை குடித்த சென்னை ரயில் பாதை தடுப்புச் சுவர் இடிப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச் சுவரை ஊழியர்கள் இடித்து தள்ளினர்.
சென்னை: சென்னை பரங்கிமலை-பழவந்தாங்கல் ரயில் நிலையங்கள் நடுவேயான பாதையில் உள்ள தடுப்புச் சுவர் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று இடிக்கப்பட்டது.
சென்னையில் கடற்கரையிலிருந்து திருமால்பூர் நோக்கி மின்சார ரயில் கடந்த 24-ஆம் தேதி சென்று கொண்டிருந்தது, அப்போது மாம்பலம், கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்கள் இடையே உள்ள உயர் அழுத்த மின்கம்பி காலை அறுந்து விழுந்தது.
இதையடுத்து ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில ரயில்கள் விரைவு ரயில் செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் திருமால்பூருக்கு ரயில் இல்லாததால் அந்த ரயிலில் கூட்டம் அலைமோதியது.
இதனால் பலர் ரயிலில் தொங்கிக் கொண்டு சென்றனர். அப்போது பரங்கிமலை-பழவந்தாங்கல் இடையே இருந்த தடுப்புச் சுவர் குறித்து பயணிகள் அறியாததால் வெளியே தொங்கி கொண்டிருந்தவர்கள் முதுகில் மாட்டியிருந்த பை அந்த தடுப்புச் சுவரில் இடித்து சிலர் கீழே விழுந்தனர்.
இவர்களில் 5 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து பாதையை மாற்றிவிடும் போது பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் தடுப்புச் சுவர் குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரை இடிக்க வைண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து ரயில் நிலையங்களில் ஆபத்தான நிலையில் உள்ள சுவர்களை இடிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து பரங்கிமலை-பழவந்தாங்கல் நடுவே இருந்த தடுப்புச் சுவரும் அகற்றப்பட்டது.