மக்கள் நீதி மையம் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது- கமல்ஹாசன்
தமிழக தண்ணீர் பிரச்சனை, காய்கறிகளில் பூச்சு மருந்து தெளிப்பது, மக்களின் உணவுப் பழக்கம் மோசமானது என நிறைய விஷயங்கள் குறித்து கமல் திருச்சி மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
திருச்சி: தமிழக தண்ணீர் பிரச்சனை, காய்கறிகளில் பூச்சு மருந்து தெளிப்பது, மக்களின் உணவுப் பழக்கம் மோசமானது என நிறைய விஷயங்கள் குறித்து கமல் திருச்சி மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார். மேலும் மக்களுக்கு மக்கள் நீதி மையம் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது என்று கமல்ஹாசன் பேசினார்.
திருச்சியில் உள்ள ஜி.கார்னர் மைதானத்தில் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அதில் தமிழக தண்ணீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு கமல் பேசினார்.
அதில் ''கர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டிய நீரை பெற்றே ஆக வேண்டும்.மற்ற மாநிலங்களிடம் இருந்து பெற வேண்டிய நீரை பேச்சுவார்த்தை, தீர்வு காண்பது கடமை.தமிழகத்தில் பெய்யும் மழையை வீணாகாமல் சிறு சிறு அணைகளை கட்டுவோம், ஏரி தூர்வாருவோம்.சொட்டு நீர்பாசனம் போன்ற நவீன நீர்ப்பாசனத்தை செயல்படுத்த வேண்டும்.'' என்றார்.
மேலும் ''நில நல மருத்துவர்களை நியமிப்போம். பயிற்சி அளிக்கப்பட்ட நில ஆய்வாளர்கள் நியமனம் செய்வோம். காய்கறி, பழ வகைகளுக்கு உள்ளூர் அடையாளம் தர ஏற்பாடு. விஷக் கலப்பில்லாத உரங்களை உற்பத்தி செய்வோம்.'' என்றார்.
மேலும் ''விவசாயிகளை சிறு தொழில் அதிபர்களை போல உருவாக்குவோம். தமிழகத்தில் 55% பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய உடற்பயிற்சி, விளையாட்டு இல்லாமல் 30% பெண்கள் உடல் எடையால் அவதிபடுகின்றனர்.பெண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்வோம். ஆண்களுக்கு டாஸ்மாக் பிரச்சனை இருக்கிறது. பெண்களுக்கு சத்து மாத்திரைகள் தரப்படும்.'' என்றார்.
மேலும் ''ஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால்தான் கல்வி நேர்மையாக இருக்கும். லஞ்சம் கொடுத்தால் பணி கிடைக்கும் நிலையில் ஆசிரியர்கள். பல கோடி பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியில் அமர்வோர் தேசத்துரோகிகள். துணைவேந்தர்களின் வியாபாரத்தை முடக்க பாடுபடுவோம்'' என நிறைய கொள்கைகள், திட்டங்கள் குறித்து பேசினார்.