திருப்பூர் சாமளாபுரத்தில் ஈஸ்வரியை கொடூரமாக அறைந்த போலீஸ் அதிகாரிக்கு 'பொன்னார் வக்காலத்து?- வீடியோ
திருப்பூரில் எந்த சூழ்நிலையில் அந்த பெண்ணை போலீஸ் அறைந்தது? ஏன் அந்த சூழ்நிலை உருவானது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: திருப்பூர் சாமளாபுரத்தில் போலீஸ் எந்த சூழ்நிலையில் அந்த பெண்ணை அடிக்க நேர்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருப்பூர் சாமளாபுரத்தில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணை கன்னத்தில் அறைந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பெண்ணை அறைந்தது கண்டனத்துகுரியதுதான்.
ஆனால் எந்த சூழ்நிலையில் போலீஸ் அந்தப் பெண்ணை அறைய நேர்ந்தது என்பதையும் பார்க்க வேண்டும். அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் விதிமுறைக்கு மாறாக செயல்பட்டு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
மேலும் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை ஐந்து முறை சந்தித்தேன். அதுமட்டுமில்லாமல் அவர்களை மத்திய விவசாயத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், நீர்வழித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர் என கூறினார்.