அடுத்த கட்ட நடவடிக்கை.. ஆகஸ்ட் 5ல் பதில் தருவார் டிடிவி தினகரன்: வெற்றிவேல் எம்எல்ஏ
ஆகஸ்டு 5ம் தேதி தனது நடவடிக்கைகள் குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளிப்பார் என்று எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் விதித்திருந்த கெடு முடியும் ஆகஸ்டு 5ம் தேதி அவர் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பார் என்று அவரது ஆதரவு எம்எல்ஏ வெற்றி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் தொடர்ச்சியாய் ஓபிஎஸ் அணி பிரிந்து சென்றது. மேலும், தினகரன் குடும்பம் கட்சியில் இருந்து வெளியேற்றினால் மீண்டும் இணையலாம் என்று ஓபிஎஸ் தரப்பில் கண்டிஷன் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த தினகரன், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த அவர், இரு அணிகளும் இணைய 60 நாட்கள் கெடு விதித்தார். இந்த 60 நாட்களுக்குள் இரு அணிகளுக்கும் இடையில் இணைப்பு ஏற்படவில்லை என்றால், தங்கள் தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் தினகரன் கூறினார்.
அந்த வகையில் வரும் ஆகஸ்டு 5ம் தேதி அன்று தினகரன் விதித்த கெடு முடிவடைகிறது. அதனால் அன்று தனது நடவடிக்கைகள் என்ன என்பதற்கு விளக்கம் தருவார் டிடிவி தினகரன் என்று அவரது ஆதரவாளர் எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். மேலும், தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்ல யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று கூறியுள்ளார். சிறை நிர்வாகம் தயாராக இருந்தால் நாங்கள் சசிகலாவை விரைவில் சந்திப்போம் என்றும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.