மழை நேரத்துல என்ன சாப்பிடலாம்.. இவங்கெல்லாம் ‘சுடச்சுட’ வாயில் வடை சுட்டா எப்டி இருக்கும்???
சென்னை: மழை காலத்திற்கு இதமாக விதவிதமான மீம்ஸ்களை தயாரித்து நெட்டிசன்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.
மறுபக்கம்.... நீச்சல் தெரியாத காரணத்தால் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, மழை நேரத்தில் வடை, முறுக்கு, அவித்த வேர்க்கடலை, சுடச்சுட காபி என எதை சாப்பிடலாம் என நாக்குகள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், மழை நேரத்துல என்ன சாப்பிடலாம் என பேச்சில் ‘புலி'கள் என பெயர் வாங்கிய சிலர் பேசிக் கொண்டால் எப்படி இருக்கும். இதோ ஒரு கற்பனை உரையாடல்....
சாலமன் பாப்பையா: மழை-னாலே வடைதாய்யா பெஸ்ட்டு. .. அந்தக் காலத்துல நாங்கெல்லாம் வாலிபப் பசங்களா இருக்கிறப்ப வாலிபால் ஆடப் போவோம்.. அப்ப
கமல்: அய்யா அவர்கள் சொல்வது உண்மைதான்.. நானும் கூட காளைப் பருவத்தில் இருந்தபோது கால்பந்து ஆடிய சமயத்தில்...
சாலமன்: கமல், இருங்க நான் இன்னும் சொல்லி முடிக்கலை...
டிஆர்.: இது சூடா போட்ட வடை.. சுடச் சுட போட்ட வடை.. எண்ணெய்யில் பட்டுத் தெறிக்கும் வடை.. வாயில் போட்டா..
சாலமன்: யாரு அது.. டி.ஆர்ரா.. வாங்க தம்பி வாங்க.. வந்து குந்துங்க... பேசிக்கலாம்..
கருணாநிதி: 1935 என்று நினைக்கிறேன்.. அண்ணாவும், நானும் அந்தக் காலத்தில் நடந்தே 40 மைல்கள் தூரம் போனோம். வழியில் 10 அனாவுக்கு பட்டாணி வாங்கி சாப்பிட்டபடி சென்றோம். அன்று எங்களுக்கு வடை வாங்கக் கூட வழியில்லாத வறிய நிலை.. ஆனாலும் பட்டாணியையும் நாங்கள் விடவில்லை...
ரஜினி: கருணாநிதி சார்.. பேச்சைக் கேட்டதுமே எனக்கும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கமல்: ரஜினி நீங்க கதைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு எனக்கு ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது. அதைச் சொல்லி முடித்த பிறகு, நீங்கள் தொடர்ந்தால் சற்று நலமாயிருக்கும் என்று நான் கருதுகிறேன்.. ஆனாலும் உங்களுக்கு...
விஷால்: அடிக்கிறோம்.. எவனா இருந்தாலும் அடிக்கிறோம்.. நானும் வடை சாப்பிட்டவன்தாண்டா..
சரத்குமார்: இப்படி பொது இடத்தில் அநாகரீகமாக பேசும் இவரைப் போயா நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். வடைக்காக அடிக்க வரும் இவர் நாளை போண்டா கிடைத்தால் பொளந்து கட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம்...?
டி.ஆர்.: மழை என்றதுமே எனக்கும் கூட ஒரு சம்பவம் நியாபகத்திற்கு வருகிறது. அப்போ எனக்கு 10 வயசு இருக்கும்... என் தங்கை கல்யாணி ஆசைப்பட்டானு வடை வாங்கித் தர ஆசைப்பட்டேன்... ஆனா கைல காசில்ல... அப்போ எழுதினேன் பாட்டு இப்படி... பொன்னான மனமே பூவான மனமே வைக்காத வடை மேல் ஆசை... நீ வைக்காத வடை மேல் ஆசை
விசு: பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்குற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா அவர் என்ன செய்வாரு... இதுக்கு பதில் தெரியணும்னா எனக்கு இப்பவே தட்டு நிறைய வடை வேணும்... கோதாவரி, வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டைக் கிழி... நான் வடை சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் யாரும் இந்தக் கோட்டை தாண்டி இங்க வரக்கூடாது... ஆமா சொல்லிட்டேன்
வடிவேலு: இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்... நீங்களும் வரக்கூடாது... என்ன இது சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு ( கையில் சூடான வடையும், கெட்டிச் சட்டினியுமாக எண்டர் ஆகிறார் வடிவேலு)
விசு: அப்போ உனக்கு 10 வயசு இருக்கும்டா... நீ வடை சாப்பிடனுங்கறதுக்காக உன் தம்பியை வடை கடைல சேர்த்து விட்டேன்... நீ வடை சாப்பிட்டு வளர்ந்த... அவன் எண்ணெய் சட்டிக்கிட்ட காய்ஞ்சான்....
பாண்டு: மிஸ்டர் அம்மையப்பன்... உங்களோட இந்த பிளாஷ் பேக் எனக்கு முக்கியமில்ல. வெளில குளுகுளுனு மழை பெய்யுது. உங்க தட்டுல இருக்குற வடைல பங்கு தருவீங்களா மாட்டீங்களா?
சூரி: எனக்கென்னவோ மழையோ, வெயிலோ பரோட்டா தான் பர்ஸ்ட் சாய்ஸ்...
சாலமன் பாப்பையா: என்னய்யா இது கொடுமை... நாம எங்கயோ ஆரம்பிச்ச பேச்சு எங்கயோ போய்டுச்சே... இன்னும் ராசா மட்டும் தான் பாக்கி. அவரும் என்ன சொல்றார்னு பார்ப்போம்
ராஜா: மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே... என்னுடைய ஓட்டும் சூடான வடைக்குத் தான். ஆனா மழைக்கு சூடா வடை போட்டுத் தாம்மானு கேட்டா, என் மனைவி அப்போ தீபாவளிக்கு வைர நெக்லஸ் வாங்கித் தருவீங்களானு கேட்டு என வாயை அடைச்சுட்டா... அப்போ முடிவு பண்ணினேன் இனிமே வடையே சாப்பிடக் கூடாதுனு
சாலமன் பாப்பையா: என்னம்மா நீங்க இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா.. !