கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்க்காமல்.. ஸ்டாலினை மட்டும் எதிர்க்கும் தேமுதிக... ஏன்"?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக போட்டியிடவில்லை. மாறாக அதை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளி விட்டுள்ளது. அதேசமயம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மட்டும் களம் குதித்துள்ளது.
தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இவர்களுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு முடிந்து தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
தேமுதிக தனது வேட்பாளர்களையும் படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் முக்கியமான 3 தொகுதிகளில் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது தேமுதிக.
ஆர்.கே.நகரில் எஸ்கேப்
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் தேமுதிக போட்டியிடவில்லை. அந்தத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தள்ளி விட்டுள்ளது.
ஏன்?
இதற்கு ஜெயலலிதாவை எதிர்க்க விரும்பவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம், மறைமுகமாக திமுக வேட்பாளர் பக்கம் வாக்குகளைத் திருப்பி விடும் முயற்சியா இது என்ற கேள்வியும் எழுகிறது.
போட்டியிட்டால் வலு குறையும்
தான் நேரடியாக போட்டியிட்டால் திமுகவுக்குப் போகக் கூடிய வாக்குகள் குறைந்து அதிமுகவுக்கு கூடுதலாக வாக்குகள் போய் விடுமே என்பதால் அதைத் தவிர்க்க அங்கு தான் நேரடியாக போட்டியிடாமல் விடுதலைச் சிறுத்தைகளை களம் இறக்கியிருப்பதாக கருதப்படுகிறது.
திருவாரூரிலும் போட்டியில்லை
அதேபோல திருவாரூர் தொகுதியிலும் தேமுதிக நேரடியாக போட்டியிடவில்லை. மாறாக அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது கடந்த தேர்தலில் இங்கு கருணாநிதியை எதிர்த்து அதிமுகதான் போட்டியிட்டது. அப்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. ஆனாலும் கருணாநிதி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில இங்கு வென்றது நினைவிருக்கலாம்.
கொளத்தூரில் ஸ்டாலினுடன் மோதல்
இருப்பினும் கொளத்தூரில் திமுகவுடன் அதாவது மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக மோதுகிறது தேமுதிக. அங்கு தேமுதிக வேட்பாளராக மதிவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஜேசிடி பிரபாகரன் மோதுகிறார்.
ஸ்டாலின் மீது கோபமோ?
மற்ற இருவரையும் விட மு.க.ஸ்டாலின் மீதுதான் தேமுதிக கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் கூட சமீபத்தில் பேசுகையில், ஸ்டாலினுக்கு அவரது எண்ணமே எதிரி என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.