மகத்துவம் தரும் மகரசங்கராந்தி
பொங்கல் பண்டிகையை வடமாநிலங்களில் மகரசங்கராந்தி விழாவாக கொண்டாடுகின்றனர். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் மூன்று ராசிகள் குறிப்பிடத்தக்கவை. சித்திரை மாதத்தில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசி மாதத்தில் சூரியன் பலவீனத்தையும்(நீச்சத்தன்மை)பெறுகிறார்.
மகரராசியில் பிரவேசிக்கும் நாளே மகரசங்கராந்தி என்று பெயர். இம்மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.
சூரியனின் வடதிசைப்பயணம்
12 மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார். இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர். பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயணகாலம் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவாகவும் இருக்கும்.
மகரசங்கராந்தி
ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர்.
உத்தராயண புண்யகாலம்
சுபகாரியங்கள் செய்வதற்கு உத்தராயண காலமே சிறந்தது. வயலும், வயல் சார்ந்த இடமுமான, மருத நிலத்துக்குரிய தெய்வம் இந்திரன். உலக பயிர்கள் சுபிட்சமாக வாழ மழையைத் தருவது சூரியன். நிலத்தை உழுவதற்கு பயன்படுவது மாடுகள். இவர்களை நன்றியுடன் நினைத்து 3 நாட்கள் மக்கள் விழா எடுத்து மகிழ்கின்றனர்.
விழா நிறைந்த தைமாதம்
தைமாதம் முதல் நாளிலிருந்து முப்பது நாளுமே பக்திமயமாகவும், விழாமயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர்.