கதறி அழுத சிவக்குமார்.. "கப்சிப்"பாகி விட்டாரே.. என்று தீரும் இந்த ஜெயலலிதா மர்மம்?
சென்னை: டாக்டர் சிவக்குமார். சசிகலாவின் அண்ணன் மருமகன். ஜெயலலிதா யாரை நம்பினாரோ இல்லையோ இவரை நம்பினார். இவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஜெயலலிதா உடலைச் சுற்றி அத்தனை பேர் நின்றிருந்தாலும் இவர் மட்டும்தான் கதறி அழுதார். இன்று சசிகலா குடும்பத்தை விட்டு ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்தவரையில் அவருக்கு மருத்துவம் பார்த்த வந்த சசிகலாவின் அண்ணன் மருமகன் டாக்டர். சிவக்குமார், தற்போது ஒதுங்கியே இருக்கிறார். தினமும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று வருவதைத் தவிர, குடும்ப விழாக்களிலும் பங்கேற்பதில்லை.
சசிகலா மீது சில விஷயங்களில் சிவக்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனம் காக்கிறார் என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.
யாருக்கும் இல்லாத சிறப்பு
சசிகலாவின் சொந்தபந்தங்களில் யாருக்கும் இல்லாத சிறப்பு டாக்டர். சிவக்குமாருக்கு இருந்தது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்த வரையில், அவருக்கான சிகிச்சைகளில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்தார். ஜெயலலிதாவை வாட்டி வதைத்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்பட அனைத்து நோய்களுக்கும் கார்டனில் மினி மருத்துவமனையையே ஏற்பாடு செய்து தந்தார். அந்த அறையைத் தாண்டி வெளியில் சிகிச்சை பெறுவதை ஜெயலலிதா விரும்பியதில்லை. சிலமுறை போரூர் ராமச்சந்திராவுக்கு வரும்போது, அந்தப் பகுதியில் மின் தடை ஏற்படுத்தப்படும் என்ற தகவல்கள் எல்லாம் வெளிவந்தன.
75 நாட்களும் உடன் இருந்தவர்
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் சிவக்குமார்தான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். வீட்டுக்குச் செல்லாமல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு எதிரிலேயே தங்கியிருந்து அவரைக் கவனித்துக் கொண்டார். ஒருகட்டத்தில் மருத்துவமனை உணவு சலித்துப் போகவே, கார்டன் சமையல்காரர்கள் அப்போலோவில் சமைக்கத் தொடங்கினர். இதன்பிறகு ஜெயலலிதா இறந்த அன்று ராஜாஜி ஹாலில் தென்பட்டார் டாக்டர். சிவக்குமார். அதன்பிறகு யாரும் அவரைப் பார்க்கவில்லை.
மிகுந்த பாசம் காட்டிய ஜெயலலிதா
ஜெயலலிதா மீது உண்மையிலேயே மிகுந்த பாசத்துடன் இருந்தார் ஜெயலலிதா. தனக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மையை அறிய, சிவக்குமாரிடம்தான் கேட்பார். நர்ஸுகள் கொண்டு வந்து கொடுக்கும் மாத்திரைகளை, சிவக்குமார் சொன்னால்தான் சாப்பிடுவார். அந்தளவுக்கு சிவக்குமாரை நம்பியிருந்தார்.
விளக்கம் தராத சிவக்குமார்
டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா சாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அமைந்தது. எதனால் இதய முடக்கம் ஏற்பட்டது என்பதற்கு அப்போலோ மருத்துவர்களும் எய்ம்ஸ் மருத்துவர்களும் முழுமையான விளக்கத்தை அளிக்கவில்லை. இதற்கென நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் டாக்டர். சிவக்குமார் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா இறந்த அன்று அவர் மட்டும்தான் கதறி அழுதார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து முழுமையாக அறிந்தவர் அவர். கடைசி நாட்களில் என்ன நடந்தது என்ற உண்மை அவருக்குத் தெரியும். நன்றாக குணமடைந்து வந்த ஜெயலலிதாவுக்குக் கடைசி நாட்களில் என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்பதை அறிவார்.
தகவல்கள் லீக் ஆகக் கூடாது
'ஜெயலலிதா மீதான பாசத்தில் இந்தத் தகவல்கள் எதுவும் வந்துவிடக் கூடாது' என சசிகலா தரப்பு விரும்புகிறது. எனவேதான், ' உங்கள் மருத்துவப் பணிகளை மட்டும் பாருங்கள். தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம்' எனக் கூறிவிட்டனர். எனவேதான், தன்னுடைய தொழிலான பிளாஸ்டிக் சர்ஜன் வேலையை மட்டும் கவனித்து வருகிறார். போயஸ் கார்டன் நிர்வாகத்திலேயே, வர்த்தகத்திலோ அவர் ஆர்வம் காட்ட விரும்பவில்லை. சசிகலா குடும்பத்திடம் இருந்து விலகியே இருக்கிறார்" என்கிறார் கார்டன் நிர்வாகி ஒருவர்.
முரண்பாடு
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்திலே, அவருடைய படத்தை வெளியிட வேண்டும் என சிவக்குமார் கறார் காட்டினார். இதை சசிகலா விரும்பவில்லை. ' இவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் இருந்தால், மக்கள் நம்மை சந்தேகப்படுவார்கள்' என அவர் கூறிய கருத்தையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதெல்லாம் ஒன்று சேர்ந்துதான் பெரிய விரிசலை உருவாக்கிவிட்டது" எனவும் அ.தி.மு.கவினர் சொல்கின்றனர்.