என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? கோபப்பட்ட ஸ்டாலின்.. ஜப்பானில் இருந்து திரும்பியதும்.. வீசப்படும் சாட்டை
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் சிலரை விரைவில் மாற்றும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 14ம் தேதி ஜூம் கால் மூலம் நடைபெற்றது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மீட்டிங் நடந்தது. திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் கண்டிப்புடன் பேசி உள்ளார்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஜும் மீட்டிங்கில் ஸ்டாலின் தொடக்கத்தில் இருந்தே கோபமாக காணப்பட்டார். முதலில் கையில் இருந்த 17 மாவட்டங்களின் லிஸ்ட் ஒன்றை படித்தார். அதில் உள்ளவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்று அட்டென்டன்ஸ் எடுத்தார்.

நான் சொன்ன லிஸ்டில் இருப்பவர்கள் மட்டும் எனக்கு பதில் சொல்லுங்கள். அவர்களுக்காகவே இந்த மீட்டிங். நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று கூறினார்.மற்றவர்களை பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கும்படி முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
அதன்பின் வரிசையாக அவர்களிடம் ஏன் இன்னும் பூத் கமிட்டியை அமைக்கவில்லை, கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறினார். முக்கியமாக நாம் 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துள்ளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை.
நீங்கள் 17 மாவட்டங்களில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு கடைசி வார்னிங். புதிய பூத் கமிட்டியை உடனே அமையுங்கள். அதோடு உடனே பூத் கமிட்டியை அமையுங்கள் என்று கூறி உள்ளார். மேலும் வெளிநாட்டு பயணத்தில் இருந்து திரும்பி வரும் நான் மாற்றங்களை பார்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளை கண்டித்து இருக்கிறாராம்.
என்ன சொன்னார்? : இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முக்கியமான ஆலோசனை கூட்டங்களை அவர் நடத்தினார்.
ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
கண்டிப்பு: ஜப்பானில் இருந்து இன்று திரும்பி வந்த ஸ்டாலின்.. செயல்படாத மாவட்ட செயலாளர்களை நீக்க உள்ளாராம். மீட்டிங்கிற்கு பின் மாற்றங்களை மேற்கொள்ளாத, புதிய நிர்வாகிகளை சேர்க்காத மாவட்ட செயலாளர்களை நீக்க உள்ளாராம்.
அங்கே புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளாராம். திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதை 79 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதாம். எல்லை பிரச்சனை உள்ள மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
கடந்த 2018-ம் ஆண்டு 65 மாவட்டங்களாக இருந்தது 72 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. இது லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு உதவியது. அதேபோல் 2024 தேர்தலுக்கு முன் மாவட்டங்களை பிரிக்க, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 ஐ குறிவைத்து இந்த மாற்றங்களை செய்ய ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.

கண்டிப்பு - அதிரடி: 2 ஆண்டுகள் முடிந்து 3ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த நிலையில் ஸ்டாலின் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் அவர் மாற்றங்களை செய்தார்.
தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications