பேரிடர் மீட்பு, மேலாண்மை.. நிலம் சார்ந்த மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதா?
சென்னை: பேரிடர் மீட்பு, பாதுகாப்பு, மேலாண்மை.. நிலம் சார்ந்த மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதா? அது மீனவர்களுக்கும், கடல் சார்ந்த மக்களுக்கும் இல்லையா என்று தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு. பாரதி கேட்டுள்ளார்.
தென்னந்திய மீனவர் சங்கத்தின் தலைவராகவும், தேசிய மீனவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள கு.பாரதி இது குறித்து கூறியுள்ளதாவது:
புயல், மழை குறித்த வானிலை அறிக்கைகள் வானொலி, தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சமூக வலைதலங்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் நிலம் சார்ந்த மக்களுக்கு மட்டுமே சென்றால் போதும் என்ற வகையிலான தகவல் தொழில் நுட்பமே இன்றுவரை உள்ளது.
ஆழ்கடலில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வரும் கடைசி மீனவனுக்கும் உங்களுடைய தகவல் தொழில் நுட்பம் சென்றடையும் வகையில் இல்லாதது ஏன்?
சென்னை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஏழு முதல் பதினைந்து நாட்கள் கடலில் தங்கி தொழில் செய்பவர்கள். ன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஏழு முதல் 45 நாட்கள் ஆழ்கடலில் தங்கி தொழில் செய்பவர்கள்.
வயர்லெஸ் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின், தகவல் பரிமாற்ற தொலைவை, கூடுதலாக ஆழ்கடலிலும் தகவல் கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட கடலோர மாவட்டங்களில் தகவல் தொடர்பு கோபுரங்களை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தற்போது ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் சில மாவட்ட மீனவர்களுக்கே உங்கள் நவீன தகவல் தொடர்பு கிடைக்காத நிலையில் அனைத்து மீனவர்களையும் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது இப்படித்தானா?
பேரிடர் குறித்த தகவல்கள் ஆழ்கடலில் உள்ள மீனவர்களை எட்டாத நிலையில், கடலோர காவல்படை, கடற்படை கப்பல்களை, ஆழ்கடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்து, அனைத்து மீனவர்களுக்கும் தகவல் கொடுத்து கரை திரும்ப செய்திருக்க அல்லது மீட்டு வந்திருக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை!
பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது என அறிவிப்பது, புயல் ஓய்ந்த பின்பு,இறந்த மீனவ உடல்களை தேடிக் கண்டு பிடித்து தரமட்டுமா?
இன்னும் எத்தனை புயல்கள், எத்தனை மீனவ உயிரகள் போன பின்பு மீனவ மக்களுக்குமான பேரிடர் மீட்பு மேலாண்மை ஆக மாறப்போகிறது என்று கேட்டுள்ளார் கு. பாரதி.
அரசாங்கங்கள் விளக்குமா?