அழையாதார் தலைவாசல் மிதித்த மோடி.. தமிழக மக்களுக்கு சொல்லவரும் சேதி என்ன?
Recommended Video

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, அழையாத விருந்தாளியாக இருந்தாலும், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தமிழக மக்களுக்கு ஒரு சேதியை தெரியப்படுத்தியுள்ளார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெற்றது.
இந்த விழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓப்ரைன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜகவுக்கு மட்டும் அழைப்பில்லை
இந்த விழாவிற்கு பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் மட்டும் அழைப்புவிடுக்கவில்லை. மதவாதத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை ஸ்டாலின் முன்னெடுத்துள்ளதாக விழாவில் பங்கேற்ற யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். ஆனால் சில மாதங்களிலேயே நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது.

ஸ்டாலின் எச்சரிக்கை
இருப்பினும் ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசின் சில கொள்கைகளுக்கு எதிராக பேசிவந்தார். ஹிந்தி திணிப்பு முயற்சி நடந்தால் மற்றொரு மாபெரும் போராட்டத்தை திமுக மீண்டும் முன்னெடுக்கும் என ஸ்டாலின் மத்திய அரசுக்கு நேரடி எச்சரிக்கைவிடுத்தார். இப்படி எதிர் கட்சி என்பதை தாண்டி எதிரி கட்சி என்ற நிலைப்பாட்டை எடுத்த திமுக தலைவர் கருணநிதி வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.

அழையாதார் தலைவாசல்
அதாவது அழையாதார் தலைவாசல் மிதித்துள்ளார் மோடி. இதன்மூலம், தமிழக மக்களுக்கு ஒரு மெசேஜ் கொடுத்துள்ளார் அவர். ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து, சசிகலா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு, நீட் விவகாரத்தில் அனிதா மரணம், ஹைட்ரோகார்பன் திட்டம், கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தம் என பல மக்கள் பிரச்சனைகளில் மக்களின் விரோதத்தை சம்பாதித்துள்ளது பாஜக. அந்த கெட்ட பெயர்களை துடைக்க மாநிலத்தின் மூத்த தலைவரை சந்தித்து தமிழர்களுக்கு தான் என்றும் மரியாதை தரும் கட்சி என சொல்ல முயல்கிறது பாஜக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முதல் சந்திப்பு
மேலும், 2004ம் ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியே வந்த பிறகு முதல் முறையாக அக்கட்சியின் அதி உச்ச தலைவர் ஒருவர் திமுக தலைவரை சந்தித்துள்ளதும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், காங்கிரஸ் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதும் மோடியின் நோக்கம் என்று பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மோடியின் வியூகத்திற்கான பலன் என்ன என்பது குறித்து தெரியவரும்.












Click it and Unblock the Notifications