சமூக வலைத்தளங்களில் கேள்விக்குறியாக்கப்படும் சுவாதியின் நடத்தை.. பெண்ணியவாதிகள் கோபம்
சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளி கூட கைது செய்யப்படாத நிலையில், அந்த பெண்ணின் நடத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இதுபோன்ற கருத்துக்கள், ஆணாதிக்க சமூகத்தின் அழுகிய மனநிலையை காண்பிக்கிறது என்று வேதனைப்படுகிறார்கள் பெண்கள் நல ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும்.
ஒரு தலை காதல் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை சில காவல்துறை அதிகாரிகளும் ஆமோதித்தனர். இருப்பினும், இதில் சுவாதியின் நடத்தை கேள்விக்குறியாக்கப்படவில்லை.
ஒரு தலை காதல்
சுவாதியை ஒரு தலையாக காதலித்தவர் வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணமே ஊடக செய்திகளில் இடம் பிடித்திருந்தது. சுவாதி எந்த வகையிலும் இதில் தவறு செய்தவர் கிடையாது என்பது ஊடக செய்திகளின் சாராம்சம்.
கதைகள் கட்டவிழ்ப்பு
சமூக வலைத்தளங்களில்தான் சுவாதியின் நடத்தை கூறுபோட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. சுவாதி ஒருவனை காதலித்து ஏமாற்றிவிட்டு இன்னொரு நபரை காதலித்திருக்கலாம் எனவும், எனவே 'பாதிக்கப்பட்ட ஆண்' 'தண்டனை தருவதற்காக' கொலை செய்திருக்கலாம் எனவும் சோஷியல் மீடியாவில் சிலர், கதைகளை அவிழ்த்துவிட்டு தங்கள் ஆழ்மனது வக்கிரங்களை தீர்த்து வருகிறார்கள்.
குத்துங்க எஜமான்
கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில், துரோகம் செய்த மனைவியை ஒருவர் கொலை செய்வார். சிறு வயது கமல் கதாப்பாத்திரம், அதை பார்த்து "குத்துங்க எஜமான், குத்துங்க.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க" என்று டயலாக் பேசும்.
கீழ்மையின் உச்சம்
இந்த திரைப்பட காட்சியை எடுத்து போட்டு சுவாதி கொலையாளிக்கு ஆதரவாக குத்துங்க.. என்று கொலை வக்கிரத்துடன் போஸ்ட் போடும் நபர்களை சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக காண முடிகிறது. விசாரணையையே முடியாத நிலையில் சுவாதிக்கு எதிராக இதுபோன்ற நடத்தை சார்ந்த விவகாரங்கள் முன்வைக்கப்படுவது ஏன்? பெண்ணியவாதிகளின் பதில்களை பாருங்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
ரியாலிட்டி ஷோ புகழ், நடிகை, லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், "நமது சமூகத்தில் பெண் என்பவள் அதிகப்படியாக புனிதப்படுத்தப்படுகிறாள். ஒழுக்கம் என்பது, ஆணுக்கும், பெண்ணுக்கும் வேண்டுமே. ஆனால் பெண் என்பவள்தான் ஒழுக்கத்தின் அத்தாரிட்டி என்பதை போல புனிதப்படுத்தப்படுவதால், அவளை கீழ்மைப்படுத்த ஒழுக்க விவகாரத்தை கையில் எடுக்கிறது சமூகம்" என்கிறார்.
கண்ணோட்டம் மாறவில்லை
பெண்ணியவாதி ஓவியா கூறுகையில் "ஒரு பெண் என்னதான் படித்து வேலைக்கு சென்றாலும், சமூகம், பெண்கள் மீதான தங்களது கண்ணோட்டத்தை இதுவரையில் மாற்றிக்கொள்ளவில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது" என்கிறார்.
பாலபாரதி சாடல்
முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுகையில். "இந்த சம்பவத்தில் பெண்ணின் கேரக்டர் பிரச்சினை கிடையாது. கொடூர கொலை நடந்துள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இதுதான் விஷயம். திசைதிருப்புதலையும், பெண்ணை இழிவு செய்வதையும் காதில் போடாமல், இதுபோன்ற படுகொலை வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்கு தேவையான நடவடிக்கைகளில்தான் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
மாற்ற வேண்டும்
சமூக ஆர்வலர் சல்மா கூறுகையில், "பெண்கள் மீது கட்டுக்கதை கட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமூக மனநிலை, அடுத்தகட்ட மாற்றத்தை நோக்கி போக வேண்டியுள்ளது. பெண்கள் குறித்த பார்வையை மாற்ற வேண்டும்" என்றார்.