+2 "டாப்பர்ஸ்" நிவேதா, பவித்ரா ஆடிட்டர் ஆக ஆசைப்படுவது ஏன்?
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களை பேட்டி கொடுக்கும் போது டாக்டர் ஆக வேண்டும் என்பது என் லட்சியம் என்று கூறுவார்கள். இல்லை எனில் கலெக்டர் ஆகவேண்டும் என்று பேட்டியளிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 2 மாணவிகளுமே சி.ஏ படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
காரணம் இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் இருவருமே காமர்ஸ் குரூப் மாணவிகள் என்பதுதான்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, கோவையை சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி நிவேதா ஆகிய இருவரும் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள்.
பவித்ராவின் ஆசை
திருப்பூரில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் கூலிபாளையம் உள்ளது. இங்குள்ள விகாஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தவர் பவித்ரா. இவரது தந்தை பெயர் ஜானகிராமன், தாயார் ராதா தந்தை தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் 1192 மார்க்குகள் பெற்றுள்ளார்.
படிப்பில் புலி
பவித்ரா பிளஸ் 2வில் தமிழ் 196, ஆங்கிலம் 197, பொருளாதாரம் 199, வணிக கணிதம் 200, கணக்குப் பதிவியல் 200, வணிகவியல் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தான் படிக்கும் விதம் பற்றி பகிர்ந்து கொண்ட பவித்ரா, பழைய கேள்வித்தாள்களையும் அதிகம் படிப்பாராம் இரவு 7. 30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அதிகாலை 3.30 க்கு எழுந்து படிப்பதாக கூறியுள்ளார்.
சி.ஏ.படிக்க ஆசை
ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பே எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. வரும் காலத்தில் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்து உயர் பணிக்கு செல்ல ஆர்வமாக உள்ளேன் என்றும் பவித்ரா கூறியுள்ளார்.
நிவேதாவின் ஆடிட்டர் கனவு
பிளஸ் 2 வில் முதல்மதிப்பெண் பெற்ற நிவேதா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 199. ஆங்கிலம் 194,வணிகக்கணிதம் 200, பொருளாதாரம் 199, வணிகவியல் 200, கணக்குப் பதிவியல் 200. இவரது ஆசையும் சி.ஏ., படிக்கவேண்டும் என்பதே.
டியூசன் போகவில்லை
தன்னுடைய மகிழ்ச்சியை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட அவர், நான் இதுவரை டியூஷன் படிக்கவில்லை வாரத்தில் இரண்டு தேர்வுகள் நடக்கும் இதில் சிறப்பாக தேர்வு எழுதுவேன் எங்களது பள்ளியில் பிரின்ஸ்பால் ஊக்கம் எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. எப்போது படிக்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்போதே படித்தேன் எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை இதனால் நான் வெற்றி பெற முடிந்தது பிகாம் சிஏ, படிக்கவே எனக்கு விருப்பம் என்று நிவேதா கூறியுள்ளார்.
இன்னொரு ஆடிட்டர்
இதேபோல வேறு மொழி பாடம் எடுத்து படித்து 1194 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீஷாவும் சி.ஏ படிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வணிக குரூப் மாணவிகள்
இந்த ஆண்டு முதல்மதிப்பெண் பெற்ற மாணவிகள் அனைவருமே காமர்ஸ் குரூப் எடுத்து படித்த மாணவிகள். எனவேதான் அவர்கள் தங்களின் கனவாக ஆடிட்டர் ஆகவேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஊத்திவிட்ட விட்ட உயிரியல்
ஆண்டுதோறும் முதல் குரூப் மாணவர்கள்தான் மாநில அளவில் முதலிடம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. காரணம் அவர்களுக்கு முழு மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைதான். ஆனால் இந்த முறை பிளஸ் டூ தேர்வில் உயிரியல் பாடத்தில் விலங்கியல் பகுதி கடினமானதாக இருந்ததே மதிப்பெண் குறைந்து போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ இந்த ஆண்டு டாக்டர் ஆக ஆசை என்று கூறுவதை விட அதிக அளவில் ஆடிட்டர் ஆகவேண்டும் என்று கூறி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளனர்.