கன்னியாகுமரி துடிக்கிறது.. ரத்து செய்யுங்கள் எம்.ஜி.ஆர். விழாக்களை.. மீனவ நண்பனின் ஆட்சியா இது??
சென்னை: கன்னியாகுமரி மாவட்டமே பரிதவித்துக் கிடக்கிறது. வரலாறு காணாத சேதம். எங்கு பார்த்தாலும் புயல் பாதிப்புகள். மீனவர்களின் நிலையைச் சொல்ல வேண்டாம். ஆனால் தமிழக அரசோ படு நிதானமாக செயல்படுகிறது.
தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், எம்.ஜி.ஆர். விழாக்கள் என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் இஷ்டத்திற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அட, கன்னியாகுமரியில் வரலாறு காணாத புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையிலும் கூட தமிழக அரசு பதறியது போலத் தெரியவில்லை.
இது மீனவ நண்பனின் ஆட்சி என்றெல்லாம் கூறிக் கொள்வது வழக்கம். ஆனால் இப்போது அந்த மீ்னவர்கள் தவித்துக் கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு முழு அளவில் அரசு இயந்திரம், அமைச்சர்கள் செயல்படுகிறார்களா என்பது தெரியவில்லை.
சேத விவரம் முழுமையாக தெரியவில்லை
கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளது. ஆனால் இதுவரை முழுமையாக சேத விவரம் தெரியவில்லை. மிகப் பெரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
பரிதாப நிலையில் மீனவர்கள்
மீனவர்களின் நிலைதான் இதில் பரிதாபமாக உள்ளது. கடலுக்குள் போன மீனவர்களில் பெரும் திரளானோர் இன்னும் திரும்பவில்லை. அவர்கள் எங்கு மாட்டியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நேரத்தில் விழாக்கள் தேவையா
தமிழகம் ஒரு பேரிடர் நிலையைச் சந்தித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் முதல்வரும், அமைச்சர்களம் தொடர்ந்து எம்ஜிஆர் விழாக்கள் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது கன்னியாகுமரி மாவட்ட மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
விழாக்களில் பேசினால் போதுமா
இதுபோன்ற விழாக்களில் நின்று கொண்டு ம்ீனவர் நலன் குறித்துப் பேசுவது நகை முரணாக இருக்கிறது என்பது மக்களின் கோபமாக உள்ளது. அதற்கு இந்த விழாக்களை ரத்து செய்து விட்டு மக்களுக்கு உதவி செய்ய வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.
மொத்த அமைச்சர்களும் போகலாமே
இடைத் தேர்தல் வந்தால் மொத்த அமைச்சர்களையும் அங்கு களம் இறக்கி அனுப்பி விடுவார் ஜெயலலிதா. அவர் உயிருடன் இருந்த சமயங்களில் எல்லாம் அதுதான் நடந்தது. அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மொத்த அமைச்சர்களையும் கொண்டு போய் இறக்கி ஆளுக்கு ஒரு ஊராகப் பிரித்து மக்களுக்கு உதவி செய்யலாம்.. இடைத் தேர்தலுக்கு மட்டும்தான் போய் முகாமிட வேண்டுமா.. மக்களுக்காககப் போகக் கூடாதா என்று குமரி மாவட்ட மக்கள் கேட்கிறார்கள்.
முன்புதான் ஜெயலலிதா இருந்தார். ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், சங்கடங்கள். இப்போதாவது ஏதாவது செய்யுங்கள் அமைச்சர்களே.. மக்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவார்கள்.