வெற்றிக்குத் தேவை 34.. திமுகவிடம் இருப்பது 23... கை கொடுக்கப் போவது யார்?
சென்னை: தமிழக, ராஜ்யசபா தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது 6வது இடத்துக்குப் போட்டியிடும் திமுகவிடம் 23 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். எனவே வெற்றிக்குத் தேவையான வாக்குகளை காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிடமிருந்து பெற வேண்டிய நிலையில் திமுக உள்ளது.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாகின்றன. இதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக நான்கு இடங்களில் போட்டியிடுகிறது. ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடைசியாக உள்ள 6வது இடத்துக்கு திமுக தனது வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையின் பலம் சபாநாயகரையும் சேர்த்து 234 ஆகும். அதிமுகவிடம் சபாநாயகரையும் சேர்த்து 151 பேர் உள்ளனர். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் மொத்தமாக 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற 34 பேரின் ஆதரவு தேவை. அந்தக் கணக்கின்படி அதிமுகவால் தற்போது 5 இடங்களிலும் வெல்ல முடியும். திமுகவுக்குத்தான் நிலைமை சிரமமாக உள்ளது.
திமுகவிடம் 23 பேர்தான் உள்ளனர். அக்கட்சியுடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ள மனித நேய கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவற்றில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். ஆனால் புதிய தமிழகம் கட்சியின் ஒரு உறுப்பினர், அதாவது ராமசாமி, அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார். எனவே அவரது வாக்கு திமுகவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே 3 பேர் கூடுதலாக கிடைத்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்தால் திமுகவின் பலம் 26 ஆக உயர்கிறது. சிவா வெற்றி பெற மேலும் 8 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ்ஆதரவு தருவதாகவே இருந்தாலும் கூட அக்கட்சிக்கு 5 பேர்தான் உள்ளனர். எனவே தேமுதிகவின் ஆதரவும் தேவைப்படும்.
தேமுதிகவிடம் 28 பேர் உள்ளனர். இவர்களில் 7 பேர் அதிருப்தியாளர்கள். எனவே தேமுதிக தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தினாலும் கூட அதற்கு திமுக உள்ளிட்டோரின் ஆதரவு அவசியம் தேவை. திமுக தன்னுடன் நாடாளுமன்றத் தேர்தலி்ல் கூட்டணி சேர தேமுதிக முன்வந்தால், சிவாவை விலக்கிக் கொள்ளத் தாயர் என்று அறிவித்துள்ளது. ஆனால் அதுகுறித்து விஜயகாந்த்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
எனவே திமுகவுக்கு, தேமுதிக ஆதரவு தருமா அல்லது தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்து திமுக ஆதரவுடன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மனுதாக்கல் செய்ய வருகிற 28-ந்தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால், அதாவது போட்டி இருந்தால் பிப்ரவரி 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.