யாதும் ஊரே... இது மக்களின் முகம், இளைஞர்களின் முகம்.. சூர்யா நெகிழ்ச்சி
சென்னை: சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் , தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் "யாதும் ஊரே" என்னும் இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
சென்னை சாந்தோம் செயின்ட் பீட்டஸ் பள்ளியில் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன், தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு 2 நாள் கருத்தரங்கம் யாதும் ஊரே என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
இதில் தி ஹிந்து குழுமத்தின் தலைவர் ராம் , புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சத்ய நாராயணா , அகரம் அமைப்பின் நிறுவனர் சூர்யா ,ராம சுப்ரமணியம் , தமிழ் அருவிமணியன், தண்ணிர் மனிதர் ராஜேந்திர சிங் , நடிகர் பார்த்திபன் , நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நந்தா , ஏ.எல்.உதயா ,அருமை சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் சூர்யா பேசியதாவது:-
பறவைகளின் முக்கியத்துவம்...
இயற்கை என்பது ஒன்றை ஒன்று சார்ந்தது , மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழலாம் ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் நிச்சயம் வாழ முடியாது என்பது தான் உண்மை.
மனிதர்களைக் காக்கிறது...
பறவைகள் இல்லாவிட்டால் பூச்சிகள் இனம் மனித இனத்தை நிச்சயம் அழித்தே இருக்கும். பறவைகள் இருப்பதனால் தான் பூச்சிகளை உண்டு நம்மை காப்பற்றி வருகிறது.
இயற்கையை நேசிக்க வேண்டும்...
தமிழ் மக்களாகிய நாம் தொன்றுதொட்டு இயற்கையை போற்றி , மதித்து , வணங்கி வருகிறோம். அப்படிபட்ட நாம் இயற்கையை நேசிக்காமல் போனதால் தான் இது போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகிறது.
யாதும் ஊரே...
ஆகவே நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். "யாதும் ஊரே"என்பது ஒரே ஒரு மனிதரின் முகம் அல்ல இது நிவாரண பணியில் ஈடுபட்ட பல்வேறு மக்கள் மற்றும் இளைஞர்களின் முகம்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை மக்களின் நிறம்...
இந்தக் கருத்தரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவர் திரு.சத்ய நாராயணா பேசுகையில், "இயல்பாக சென்னையில் வாழும் மக்களுக்கு என்று ஒரு நிறம் உண்டு. அது யாதெனில் , சென்னையில் வாழும் மக்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட யாரென்று தெரியாமல் வாழ்வார்கள் என்றொரு பேச்சு உண்டு.
பொய்யான பேச்சு...
அதே போல் இளைஞர்கள் என்றால் எப்போதும் பேஸ்புக் போன்ற சமுக வலைதலங்களிலேயே தங்களுடைய பொன்னான நேரங்களை செலவிட்டு வீணாக்குகிறார்கள் என்று. அதையெல்லாம் இந்த மழை வெள்ள நேரத்தில் களத்தில் இறங்கி நிவாரண பணியில் ஈடுப்பட்ட மக்களும் , இளைஞர்களும் பொய்பித்து உள்ளனர்.
இளைஞர்களின் பங்கு...
ஏன் புதிய தலைமுறை நிறுவனமே தங்களுடைய ஒளிபரப்பை நிகழ்த்த இயலாமல் ஸ்தம்பித்து நின்றது. ஆனால் அதை எல்லாம் தாண்டி மீண்டும் எழுந்து நின்று தங்களுடைய ஒளிபரப்பை துவங்கியது. அதை போல் வெள்ள நேரத்தில் சென்னையையே மீண்டு எழ செய்தது இந்த இளைஞர்களின் சிறப்பான நிவாரண பணிதான்" என்றார்.