பலருடன் உறவு.. ஆரல்வாய்மொழி பெண் கொலை வழக்கில் திருப்பம்... கணவரே கொலை செய்து விட்டு நாடகம்!
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியில் நடந்த இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவரே மனைவியை கொன்றது அம்பலமாகியுள்ளது.
ஆரல்வாய்மொழி: நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியில் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொலையுண்ட விவகாரத்தில் கணவரே 1கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி ஷாலினி (வயது 27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தை இல்லை.
எனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும் ஷாலினியை ஆதித்தன் அவ்வப்போது சந்தித்து பொருள் உதவி செய்து வந்தார்.
கதவு பூட்டப்பட்ட நிலையில்...
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி ஷாலினியை சந்திக்க ஆதித்தன் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பின்பக்க கதவு திறந்திருந்த நிலையில் அவ்வழியாக சென்றபோது படுக்கை அறையில் நிர்வாண நிலையில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
துப்பு கிடைக்கவில்லை
இதுதொடர்பாக ஆதித்தனின் புகாரின்பேரில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஷாலினியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அதில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
கணவன் மீது சந்தேகம்
இதையடுத்து போலீஸாரின் சந்தேகம் ஷாலினியின் கணவர் மீது திரும்பியது. ஷாலினி மின் கட்டணம் செலுத்த பணம் கேட்டிருந்ததாகவும், அதனை கொடுக்கச் சென்றபோது தான் ஷாலினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததாகவும் போலீஸாரிடம் அவர் தெரிவித்தார். பின்னர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் தெரிவித்தார்.
நாடகம் அம்பலம்
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஷாலினியை கொன்றது அவரது கணவர் ஆதித்தன் என்பது உறுதியானது. அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் ஆதித்தன் அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறியதாவது, கடந்த 14-ம் தேதி செங்கல் சூளைக்கு இரவு வேலைக்கு சென்றேன்.
வாக்குவாதம்
ஷாலினிக்கு பணம் கொடுக்க அவர் வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்து 2 இளைஞர்கள் வெளியே சென்றதை கண்டவுடன் ஆத்திரம் அடைந்தேன். இதனால் ஷாலினியுடன் வாக்குவாதம் செய்து தலையணையால் அழுத்தியும், கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலை செய்தேன்.
கொலையை திசை திருப்ப...
பின்னர் ஷாலினி பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளதால் அவர்கள் மீது கொலையை திசை திருப்பும் நோக்கில் ஷாலினியை நிர்வாணமாக்கி, பீரோவில் இருந்த பொருள்களை வீசினேன். பின்னர் வழக்கம் போல் சூளைக்கு வேலைக்கு சென்றேன் என்று வாக்குமூலத்தில் கூறினார். இதைத் தொடர்ந்து கைதான ஆதித்தனை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.