இதெல்லாம் ஒரு பிரச்சினையாங்க? துரை வைகோ முன்னிலையில் மோதிக் கொண்ட மதிமுகவினர்! பரபரத்த தேனி!
தேனி : தேனியில் டிக்கெட் பெறுவதில் மதிமுக நிர்வாகிகளில் இரு தரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முன்னிலையிலேயே மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளை துரை வைகோ சமாதானப்படுத்தினார்.
மதிமுக பொது செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி எடுக்கப்பட்ட 'மாமனிதன் வைகோ' என்ற ஆவனப்படத்தை வைகோவின் மகனும், மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ தயாரித்து அதனை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கட்சியினருக்கு திரையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இதன் ஒருபகுதியாக தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் மாமனிதன் ஆவணபடத்தை மதிமுக சார்பில் திரையிடுவதற்காக ஏற்பாடுகளை தேனி மாவட்ட மதிமுகவினர் செய்து இருந்தனர்.
அமித்ஷாவின் இந்தி திணிப்பு கொக்கரிப்பு பேச்சு- சென்னையில் வைகோ தலைமையில் மதிமுக இன்று போராட்டம்
துரை வைகோ
இதில் வைகோவின் மகனும், மதிமுகவின் தலைமை கழக செயலாளருமான துரை வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஆவண படத்தை பார்ப்பதற்காக மதிமுக சார்பாக இந்த திரையரங்கில் அனைத்து டிக்கெட்டுகளை மதிமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் கே,ராமகிருஷ்னன் பெற்று அதனை மதிமுகவினருக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார்.
டிக்கெட் பிரச்சினை
அந்த சமயம் அதன் அருகில் துரை வைகோ கட்சி நிர்வாகிகளிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ராமகிருஷ்ணனிடம் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரை ராமகிருஷ்ணன் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிர்வாகியும் ராமகிருஷ்ணனை அடிக்க பாய்ந்து ஒருமையில் திட்டினார்.
துரை வைகோ சமாதானம்
இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இவர்கள் இருவரையும் கட்சி நிர்வாகிகள் விலக்கி விட முயற்சி செய்த நிலையில் அங்கிருந்த துரை வைகோ அவர்களிடம் பேசி சமாதானம் செய்து அவர்களை திரையரங்கிற்குள் படம் பார்க்க அனுப்பி வைத்தார். மதிமுகவினரின் இந்த பிரச்சனையினால் தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துரை வைகோவின் முன்னால் மதிமுகவினர் மோதி கொண்ட சம்பவம் மதிமுகவில் தேனி மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உட்கட்சி பூசல்
கட்சியில் பணி செய்யாமல் இருப்பவர்கள் துரோகம் செய்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. வெளியே செல்லலாம் என துரை வைகோ கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் துரை வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இதை அடுத்து அந்த மாவட்டத்தில் கட்சி கலைக்கப்படுவதாக துரை வைகோ கூறியிருந்தார். பல மாவட்டங்களிலும் துரை வைகோவுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் மீது சக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அந்த வகையிலேயே தேனியிலும் உட்கட்சி பூசல் அரங்கேறி இருக்கிறது என்கின்றனர் நம்மிடம் பேசிய மதிமுக நிர்வாகிகள்.