நள்ளிரவில் பகீர்! திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே பயங்கரம்
திருநெல்வேலி: பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகிலேயே திமுக பிரமுகர் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகர 24 வது வார்டு திமுக செயலாளராக இருப்பவர் பொன்னு தாஸ் என்ற அபே மணி. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அபே மணி நேற்று இரவு 11 மணி பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல் மணியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் டாஸ்மாக் மதுபான பார் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராற்றில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு திமுகவிற்குள்ளே பலரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் துணை மேயர் வேட்பாளர் பதவி பெற அபே மணி மும்முரமாகச் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகிலேயே இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications