Nellai Kavin Murder: நெல்லை கவின் ஆணவக் கொலை! கைதான சுர்ஜித்தின் பெற்றோரான எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்
நெல்லை: திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான நபரின் பெற்றோர் இருவரும் உதவி காவல் ஆய்வாளர்களாக இருந்து வரும் நிலையில் அவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஐஜி விஜயலட்சுமி பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார் (28). இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நோயால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர், கவின்குமாருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின்குமாரை நோக்கிப் பாய்ந்துள்ளார்.
இதனால் பயந்த கவின்குமார், உயிரைக் கையில் பிடித்து ஓடினார். ஆனாலும் அந்த இளைஞர், கவினை துரத்திப் பிடித்து சரமாரியாக வெட்டினார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கவின்குமார் அதே இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயர் சுர்ஜித். அவருடைய தந்தை சரவணன், மணிமுத்தாறு பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வருகிறார். அதுபோல் அவருடைய தாயார் கிருஷ்ணகுமாரி, ராஜபாளையம் பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வருகிறார் என தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது சகோதரியை கவின்குமார் காதலித்து வந்தாராம். இதற்கு இரு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம். சுர்ஜித்தும் தனது சகோதரிக்கு அறிவுரை வழங்கியிருந்தாராம்.
ஆனால் அவர் கேட்காமல் கவினுடன் பழகி வந்தாராம். தனது சகோதரி சித்த மருத்துவராக இருக்கிறாராம். அவர் பணியாற்றும் மருத்துவமனைக்குத்தான் கவின்குமார் அடிக்கடி அவரது தாத்தாவை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்கு செல்வாராம். அது போல் சம்பவம் நடந்த நாளன்று, கவின்குமார், தனது சகோதரியிடம் பேசியதை சுர்ஜித் எப்படியோ அறிந்து கொண்டாராம். இதையடுத்து அவர் வழக்கமாக செல்லும் வழியில் காத்திருந்தாராம். அப்போது அவரை வெட்டி கொன்றுவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுர்ஜித்தை அவரது தாய் தந்தை தூண்டிவிட்டதால்தான் அவர் கவினை கொலை செய்தார். எனவே அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்று முதல் கவினின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கவினின் உடலை பெறவும் மறுத்துள்ளனர். இந்த நிலையில் டிஐஜி விஜயலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர்களான கிருஷ்ணவேணியையும், சரவணனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications