பெட்டிக் கடை, பள்ளியில் தீண்டாமை: தென்காசி பாஞ்சாகுளம் விஏஓ இடமாற்றம்.. கோட்டாட்சியர் உத்தரவு
தென்காசி: தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளத்தில் தீண்டாமையை அடுத்து அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர் மல்லிகா இடமாற்றம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மேலத் தெரு, கீழத் தெரு என ஜாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரு தெருக்கள் உள்ளன.
இதில் கீழத் தெருவில் வசிக்கும் பட்டியலின மாணவர்கள் நேற்று முன் தினம் ஒரு பெட்டிக் கடையில் தின்பண்டங்களை வாங்க வந்தனர். ஆனால் அந்த கடைக்காரரோ இனி உங்களுடைய தெருவில் இருப்போருக்கு தின்பண்டங்களை தர முடியாது.
தின்பண்டங்கள் கிடையாதுனு பட்டியலின மாணவர்களை விரட்டிய தென்காசி பெட்டிக்காரர் கைது.. கடைக்கும் சீல்
விரட்டிய பெட்டிக் கடைக்காரர்
பள்ளிக்கு செல்லுங்கள் என மனசாட்சியே இல்லாமல் விரட்டியடித்தார். அந்த மாணவர்கள் ஏன் என கேட்டபோது உங்கள் தெருவுக்கு தின்பண்டங்கள் கொடுக்க கூடாது என ஊரில் கட்டுப்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். அதற்கு அந்த குழந்தைகள் கட்டுப்பாடா என வெள்ளந்தியாக கேட்டதற்கு அந்த கடைக்காரர், ஊருக்குள்ள பெரியவங்கலாம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள் என்கிறார்.
பிள்ளைகள் ஏமாற்றம்
இதனால் அந்த பிள்ளைகள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து தென்காசி போலீஸார் விசாரணை நடத்தி ஊர் கட்டுப்பாடு விதித்த மேலத் தெருவை சேர்ந்த ராமசந்திர மூர்த்தியையும் பெட்டிக் கடை உரிமையாளர் மகேஸ்வரனையும் கைது செய்தனர்.
பெட்டிக் கடைக்கு சீல்
பெட்டிக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் இருக்கக் கூடாது என தென்காசி மாவட்ட ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளியிலும் ஜாதிய பாகுபாடு பார்ப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். பள்ளியில் மேலத் தெருவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பெஞ்ச் இருப்பதாகவும் தாங்கள் எத்தனை சீக்கிரமாக பள்ளிக்கு வந்தாலும் தரையில்தான் உட்கார வேண்டும் என்றும் இது என்ன என்றே அறியாத மாணவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.
விஏஓ இடமாற்றம்
இந்த நிலையில் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தாங்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் நடத்துகிறோம் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ளார்.