கார்த்திகை தீபத்திருவிழா... அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் கொடியேற்றம் - 19ல் மகாதீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 19ஆம் தேதி மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 19ஆம் தேதியன்று அதிகாலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும் மாலையில் மகாதீபமும் ஏற்றப்படும். கொரோனா பரவல் காரணமாக மகாதீபம் நாளன்று அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கூறினார்.
சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வராஹமாக வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் லிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார்.பிரம்மாவோ, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய் கூறினார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது.
திருவண்ணாமலையை நினைக்க முக்தி அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம். இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்து அர்த்தநாரீஸ்வரராய் நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம்.

துர்க்கை அம்மன் உற்சவம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு தீபத்திருவிழா 17 நாட்கள் நடைபெறும். கடந்த மாதம் பந்தக்கால் நடப்பட்டது. காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவம் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் துர்கை அம்மன் அருள்பாலித்தார். 8ஆம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், நேற்று 9ஆம் தேதி வெள்ளி மூஷீக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் மற்றும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற்றது.

தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம்
அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.10 நாட்கள் சுவாமி அம்மன் அலங்கரிக்கக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருவார்கள்.

மகா தேரோட்டம் ரத்து
மாட வீதியில் நடைபெறும் உற்சவம் மற்றும் மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5ஆம் பிரகாரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாதீபம்
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக, மகாதீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் கொடுக்க உள்ளார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

பக்தர்கள் தரிசிக்க தடை
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சி கொடுப்பதால் மூலவர் சன்னதி அடைக்கப்படும். பின்னர் மறுநாள், மூலவர் சன்னதி திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவமானது இந்தாண்டும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தெப்பல் உற்சவத்தை தொடர்ந்து, 23ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளுவார் அத்துடன் தீபத்திருவிழா நிறைவடையும்.

பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடும் திருவிழாக்களை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும், 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-பாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது.

இ- பாஸ் பெறுவது அவசியம்
சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவிகிதமும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications