தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 80 வழக்குகள் பதிவு... திருவாரூரில் தேர்தல் பணிகள் சூடுபிடித்தது
திருவாரூர்: திருவாரூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி காலியானது. இதனையடுத்து, 20 தொகுதிகளுக்கு இடையே திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
வருகிற 28 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 30ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 31 ஆம் தேதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதும், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில் திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, சுவர் விளம்பரம், பேனர்கள் வைத்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இதுவரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட பல கட்சியினர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கருத்து கேட்பு கூட்டத்தில், தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதனால், தேர்தல் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர்.