மன்னார்குடி டூ லாஸ் ஏஞ்செல்ஸ்: கடத்தப்பட்ட மூன்று சிலைகள் கண்டுபிடிப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோயிலில் கடந்த 2017ல் திருடப்பட்ட 3 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இந்த மூன்று சிலைகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களில் திருவாரூர் மன்னார்குடி வேணுகோபாலசுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. சுமார் 32 ஏக்கர் அளவில் பரவியுள்ள இக்கோயில், சோழர் கால வம்ச கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்திருக்கோயில் வளாகத்தில் 16 கோபுரங்களுடன் 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோயில் குளங்கள்) உள்ளன. உற்சவர் சிலை சோழர் காலத்தினைச் சேர்ந்த ஓரு வெண்கலச் சிலை ஆகும்.
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இந்தக் கோயில் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கிபி 1070-1125 இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோயில் சுற்றி வளரத் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவடையும்.
இத்தனை பிரசித்திப்பெற்ற திருக்கோயிலில் கடந்த 2017ம் ஆண்டு சிலைகள் திருடுபோனதாக புகார்கள் எழுந்தன. இதனை கண்டறியும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சிலைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சிலை வெளி நாடுகளுக்கு எங்கேனும் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்தனர். இதன் அடிப்படிடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்த கோயிலிலிருந்து கடத்தப்பட்ட விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகளும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த சிலைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications