திருப்பதியில் ஆனி வார ஆஸ்தானம்...ஏழுமலையானிடம் வரவு, செலவு சமர்ப்பிப்பு - ஆடி முதல் புதுக்கணக்கு
ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி: சித்திரை மாதத்தில் நாமெல்லாம் புதுக்கணக்கு போடுவோம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஆண்டு வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டது. ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் எனப்படும் விழா ஆனி மாதம் கடைசி நாளில் பாரம்பரியமாக நடைபெறும்.
1956ம் ஆண்டுக்கு பின்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோவில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

ஆனி கடைசியில் புதுக்கணக்கு
சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவிலில் ஆனி கடைசி நாளில் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும்.
இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும்.

ஸ்ரீரங்கநாதர் சீர் வரிசை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி மாத கடைசி நாளன்று ஆனி வர ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம். ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பட்டு வஸ்திரங்கள்
நேற்று காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூ மாலைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வந்து சமர்பித்தார். அந்த ஆடைகள சின்ன ஜீயங்கார் சுவாமி உடனிருந்து வெங்கடேஸ்வரருக்கு சாத்தப்பட்டது.

ஏழுமலையானுக்கு கணக்கு
9 மணிக்கு கடந்த ஆண்டு கோவிலுக்கு உண்டான வரவு, செலவு கணக்குகள் ஏழுமலையான் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. ஆடியில் புதிய கணக்கு தொடங்கப்படுவதற்குக் காரணம் வைணவ மகா குரு ராமானுஜர் வகுத்த நடைமுறையாகும். ஏழுமலையானுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அந்த கணக்கு வழக்குகள் சாமி முன்பாக வாசிக்கப்பட்டன.

ஏழுமலையான் பவனி
நேற்று மாலை 6 மணிக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் புஷ்பப் பல்லக்கில் பவனி வந்து அருள்பாலித்தார்.

தேவஸ்தான ஊழியர்கள்
கொரோனா தொற்று பரவல் தடை கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் பல்லாக்கு பவனியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் பூப்பல்லாக்கு பவனியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications