உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழி எது?.. எல்லா பெருமையும் ஈழத் தமிழர்களுக்கே.. நடிகர் சத்யராஜ்
திருப்பூர்: உலகிலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ்மொழிதான் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழிசை சங்கம் துவக்க விழா ஜி.வி.ஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
இவர் இந்த நிகழ்வில் பேசுகையில், தன்னை வாழ வைத்தது தமிழ் மொழி என்று கூறுவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். மேலும் தமிழ் வசனங்களை அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது.
பெரியார் கொள்கைக்கு எதிரான படத்துக்கு “நோ”.. கண்டிஷன் போட்டே நடிப்பேன் - நடிகர் சத்யராஜ் விளக்கம்
தொன்மை வாய்ந்த மொழி
அவ்வாறு தொன்மை வாய்ந்த தமிழ் வசனங்களை எம்ஜிஆர், சிவாஜி இடம் பேசி வாழ்த்துக்களை பெற்றுள்ளேன் என்று கூறி சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் வசனமும் எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் வரும் வசனமும் மேடையில் பேசி அசத்தினார்.
அதிகம் பேசப்படும் மொழி
மேலும் உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் மொழிதான் மற்றும் தமிழ் மொழியை உலகம் முழுவதும் வளர்த்த பெருமை தமிழ் அறிஞர்களுக்கும் குறிப்பாக ஈழத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் பெரும் அளவு சாரும் என பேசினார். மேலும் தமிழிசை சங்க துவக்க விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
சமூகம் சார்ந்த கருத்துகள்
நடிகர் சத்யராஜ் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிகேட்டும் வருகிறார். அது போல் மொழி சார்ந்த விஷயத்திலும் சத்யராஜ் தன் கருத்துகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
தீவிர பெரியாரிஸ்ட்
தீவிர பெரியாரிஸ்ட்டான சத்யராஜ் அவருடைய கருத்துகளை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார்கள். அண்மையில் திருச்சியில் நடந்த ஒரு விழாவில் சத்யராஜ் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இன்று சௌக்கியம் என்று கூறுவதற்கு காரணம் தந்தை பெரியார்தான். சமூகநீதிக்கா குரல் கொடுப்பவர்கள் அனைவருமே நமது எம்பிக்கள்தான்.
பகுத்தறிவு
சுயமரியாதை, பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்தவர் பெரியார். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பெரியார் இருந்திருந்தால் நானே நேராக வந்து நிற்கிறேன், என் மீது செருப்பு போடுங்கள் என அவரே பெற்றுக் கொள்வார்- எதற்கு பயந்தவர் தந்தை பெரியார் அல்ல. பெரியார் என்பவர் ஒரு சிலை அல்ல, அவர் ஒரு தத்துவம் , ஒரு கோட்பாடு என பேசியிருந்தார் சத்யராஜ்.