தியேட்டரில் ரஜினி போல சிகரெட் பிடித்தபடி படம் பார்த்த ரசிகர்.. அடித்து கொன்ற பக்கத்து சீட்காரர்
தியேட்டரில் படம் பார்த்த ரஜினி ரசிகர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
திருப்பூர்: 'பேட்ட' படத்தை பார்த்து கொண்டே சிகரெட் பிடித்த ரஜினி ரசிகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. கட்டிடதொழிலாளியான இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர். இந்நிலையில் கடந்த 12 ந்தேதி அங்குள்ள லதாங்கி என்ற தியேட்டரில் 'பேட்ட' படம் பார்க்க மணிகண்ட பிரபு சென்றிருக்கிறார்.
அப்போது படம் பார்த்து கொண்டே, ரஜினியை போல வாயில் சிகரெட்டை பற்ற வைத்து ஸ்டைலாக ஊதி கொண்டிருந்தார். இதை பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கவனித்துவிட்டு, சிகரெட் பிடிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார்.
சரமாரி அடி
ஆனால் தன் தலைவன் படம் என்ற உற்சாகத்தில் சிகரெட்டை பிரபு தொடர்ந்து பிடித்து கொண்டே இருந்திருக்கிறார். இது இருவருக்கும் தகராறாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பக்கத்து சீட்டுக்காரர் பிரபுவின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கி உள்ளார்.
தீவிர சிகிச்சை
பிறகு கீழே கிடந்த கட்டையை எடுத்து நடுமண்டையில் அடித்துள்ளார். இதில் பிரபு படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். படம் முடிவதற்குள்ளேயே இவ்வளவும் நடந்து முடிந்தது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பிரபு பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சிசிடிவி காட்சிகள்
ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது தியேட்டரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போதுதான் மேற்கண்ட விவரங்கள் போலீசார் தெரிவித்தனர்.
தொடர் வன்முறை
பிரபுவை தாக்கிய பக்கத்து சீட்டுக்காரர் அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பது அடையாளம் காணப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர். பேட்ட, விஸ்வாசம் இரு படங்களும் ரிலீசான நாள் முதல் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கிறது. ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் வன்முறையில் ஈடுபட்டு கொலை வரை சென்று கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.