கரம் பிடிக்க மறுத்த காதலன்.. விஷம் குடித்த காதலி.. காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்த பரிதாபம்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் 26 வயது வாலிபர் ஒருவரும், அவருடைய உறவினரான 23 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் எல்லை மீறி காதலில் இருந்து விலகி காமத்தில் வீழ்ந்ததால் அந்த இளம்பெண் கர்ப்பமானார்.
இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார். தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் தெரிவித்தார்.

கருவை கலைத்துள்ளார்
இதனை தொடர்ந்து அந்த காதலன், ''உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் உன்னில் வயிற்றில் வளரும் 2 மாத கருவை கலைத்து விடு. திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம் என்றால் ஊர் தவறாக பேசும்'' என்று கூறியுள்ளார். மேலும், கருவை கலைக்க காதலிக்கு மாத்திரையும் வாங்கி கொடுத்துள்ளார். காதலன் தன்னை கரம் பிடிப்பான் என்று உறுதியுடன் நம்பிய அந்த பெண் கொஞ்சம் கூட யோசிக்காமல் கருவை கலைத்துள்ளார்.

திருமணம் செய்ய முடியாது
அதன்பின்னர் திருமணம் செய்து கொள்ளும்படி காதலனிடம் கூறியுள்ளார். '' உன்னை திருமணம் செய்ய முடியாது. நீ கர்ப்பம் அடைந்து, கலைத்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன்'' என்று காதலன் கூற, காதலிக்கு தூக்கிவாரிப் போட்டது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் பெற்றோர்களிடம் நடந்ததை கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனை தொடர்ந்து இளம்பெண்ணும், அவரது பெற்றோரும் நீதி கேட்டு கடந்த 15-ந் தேதி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசில் புகார்
காதலன் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்தப் பெண் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பெண் பெற்றோருடன் நேற்று மகளிர் போலீஸ் நிலையம் வந்துள்ளார் . இளம்பெண் ஏற்கனவே கொடுத்த புகார் தொடர்பாக அவரிடமும், அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

தற்கொலை முயற்சி
அப்போது இளம்பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் இளம்பெண் விஷம் குடித்தது தெரியவந்தது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது காதலன் ஏமாற்றியதால்தான் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications